ஷரியா சட்டத்தை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தலாம் என முஸ்லிம்கள் கருதக் கூடாது: பேராயர் மல்கம் ரஞ்சித்

🕔 December 4, 2020

முஸ்லிம்கள் ஷரியா சட்டத்தினை முக்கியமானதாக கருதலாம் அதற்காக அதனை இலங்கையின் சட்டமாக அர்த்தப்படுத்த முடியாது என, பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஷரியா சட்டத்தினை ஏனைய சமூகங்களின் மீது திணிக்கலாம் என்றோ அல்லது அதனை ஏனைய சமூகங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கோ அச்சுறுத்துவதற்கோ பயன்படுத்தலாம் என்றோ முஸ்லிம்கள் கருதக்கூடாது எனவும் மல்கம் ரஞ்சித் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தன, நேற்று வியாழக்கிழமை பேராயரைச் சந்தித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து இதுவரை இடம்பெற்ற விசாரணைகள் மூலம் ஷரியா சட்டமும் ஷரியா சட்டத்தினை போதிக்கும் அமைப்புளும் இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளதாகவும் பேராயர் மல்கம் ரஞ்சித் கூறியுள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் உரிய முறையில் இடம்பெறாவிட்டால், மாற்றுவழிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“தற்போதைய விசாரணைகள் உரிய முறையில் இடம்பெறாவிட்டால் நாங்கள் விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பை வேறு தரப்பினரிடம் வழங்க வேண்டிவரும். மாற்று வழிமுறைகளை தேடவேண்டியிருக்கும்” எனவும் அவர் கூறியுள்ளார்.

நாளாந்த விவகாரங்கள் காரணமாக ஈஸ்டர் தின தாக்குதல் குறித்த விசாரணைகள் பின்னோக்கி செல்வது பொருத்தமற்றது என குறிப்பிட்டுள்ள மல்கம் ரஞ்சித், தாக்குதல்கள் குறித்த உண்மைகள் கண்டுபிடிக்கப்படும் வரை கத்தோலிக்கர்கள் விழிப்புடன் இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

“அரசாங்கமும் ஜனாதிபதியும் இந்த குண்டு தாக்குதல்கள் குறித்த முழுமையான விசாரணைகள் இடம்பெறும் என உறுதியளித்துள்ளனர். இது குறித்த விசாரணைகளை ஜனாதிபதி ஆணைக்குழு மாத்திரமின்றி ஏனைய அரச அமைப்புகளும் முன்னெடுக்க வேண்டும்,

அரசியல் தேவைகளுக்காகவும் ரகசிய உடன்பாடுகளுக்காகவும் இவை மூடி மறைக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை” எனவும், பேராயர் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினக்குரல் இணையம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்