அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டம் 14 நாட்கள் வரை நீடிக்கும்: மாகாண சுகாதார பணிப்பாளர்

🕔 November 28, 2020
டொக்டர் லதாகரன்

– பாறுக் ஷிஹான் –

க்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழுள்ள பிரதேசங்களில், 07 தொடக்கம் 14 நாட்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்படும் என, கிழக்கு மாகாண மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார். 

கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயத்தை அவர் கூறினார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 31 பேர் அடையாளம் காணப்பட்டமையினை அடுத்து, நேற்று முன்தினம் வியாழக்கிழமை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

இந்த நிலையிலேயே, மேற்படி தனிமைப்படுத்தல் சட்டம், மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் தொடர்ந்தம் நீடிக்கும் என மாகாணப் பணிப்பாளர் கூறினார்.

கிழக்கு நிலைவரம்

“கிழக்கில்  தற்போதைய முடிவின் பிரகாரம் 177  கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் திருகோணமலை மாவட்டத்தில் 16 தொற்றாளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 88 தொற்றாளர்களும் அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 08 தொற்றாளர்களும் கல்முனை சுகாதாரப் பிராந்தியத்தில் 65 தொற்றாளர்களும் உள்ளடங்குகின்றனர்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

அக்கரைப்பற்று  பிரதேசத்தில் 37 பேரும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மற்றுமொருவரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்மாந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இறக்காமம் பகுதியை சேர்ந்த ஒருவர் பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன்  அக்கரைப்பற்று பொலிஸ் எல்லைக்குட்பட்ட ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய மூன்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இத்தொற்றின் பாதிப்பு காணப்படுகின்றது. இதனால் இப்பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பிரதேசங்களில் வீணாக நடமாடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அத்தியவசிய தேவை தொடர்பில் இம்மூன்று பகுதி பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரைக்கும் தனிமைப்படுத்தல் தொடர்ச்சியாக இப்பிரதேசத்தில் கடைப்பிடிக்கப்படும்.

தனிமைப்படுத்தல் நீடிக்கும்

இத்தனிமைப்படுத்தலானது 07 நாட்கள் முதல் 14 நாட்கள் தொடர்வதற்கு சாத்தியமுள்ளது. இத்தனிமைப்படுத்தல் நீடிக்க காரணம், தொற்று ஏற்பட்டதாக கூறப்படும் சந்தைப்பகுதிக்கு நாளாந்தம் நூற்றுக்கணக்கான நபர்கள் வந்து செல்கின்றனர்.

இதனால் குறித்த மூன்று பிரதேசத்தில் உள்ளவர்கள் சந்தையுடன் தொடர்புள்ளவர்கள் மற்றும் தொற்றாளர்களுடன் தொடர்புள்ளவர்கள் அடையாளப்படுத்தப்படும் வரை, தனிமைப்படுத்தல் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்படும்” என்றார்.

இதேவேளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே. சுகுணன் மேற்படி ஊடக சந்திப்பில் பேசுகையில்;

“புதிதாக கொரோனா பாதிப்புக்கு உட்பட்டவர்களில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேரும், அட்டாளைச்சேனையில் இருவரும், ஆலைடியவேம்பு பிரதேசத்தில் ஒருவரும் அடங்குகின்றனர். இவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர்களின் குடும்பங்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

இதேநேரம் தொற்று மேலும் அதிகரிக்கலாம் என கூறிய அவர், புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்படும் இச்சந்தர்ப்பத்தில் மக்கள் முகக்கவசம் அணிவதை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

“சமுக இடைவெளி பேணாமை, முகக்கவசம் அணியாமை, பலர் ஒன்றுகூடுதல் போன்ற நடவடிக்கைகள் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்படவுள்ளன.

மேலும் பாடசாலை மாணவர்கள் எவருக்கும் இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை” எனவும் டொக்டர் சுகுணன் தெரிவித்தார்.

டொக்டர் சுகுணன்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்