குறிபார்த்துச் சுடுதலில் வெற்றி பெற்று, கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை
– எம்.வை. அமீர், அஸ்ஹர் இப்றாஹிம் –
இலங்கை பாடசாலைகள் குறிபார்த்துச் சுடும் விளையாட்டு சம்மேளனம் கல்வியமைச்சுடன் இணைந்து நடத்திய, அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான குறிபார்த்துச் சுடும் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் என்.எம். நிஸாத் இரண்டாம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி வரலாற்றில், குறிபார்த்துச் சுடும் போட்டியில் மாணவரொருவர் வெற்றியீட்டிமை இதுவே முதல் தடவையாகும்.
மேற்படி போட்டி, அம்பாறை டீ.எஸ்.சேனநாயக தேசிய கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் பீ.எம்.எம். பதுறுதீன் மற்றும் மேற்பார்வையில் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் லெப்டினன் கே.எம்.தமீம் ஆகியோரின் வழிகாட்டல் மற்றும் பயிற்சியினால் மேற்படி மாணவன் இச் சாதனையை புரிந்துள்ளார்.
கல்முனை ஸாஹிரா கல்லூரியில் கடந்த இருவாரத்திற்கு முன்னரே, குறிபார்த்துச் சுடும் கழகம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இக் கழகத்தில் 11 மாணவர்கள் முதன் முதல் அங்கத்தவர்களாக இணைந்து பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்படி போட்டியில் கலந்து கொண்டு இம் மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலுமிருந்தும் நூற்றுக்கும் அதிகமான சிங்கள ,தமிழ் , முஸ்லிம் மாணவர்கள் கலந்து கொண்ட மேற்படி போட்டியில், கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியிலிருந்து கலந்து கொண்ட மாணவன் என்.எம். நிஸாத் இரண்டாம் இடம்பெற்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பாடசாலைகள் குறிபார்த்துச் சுடும் விளையாட்டு சம்மேளனத்தின் தொழில்நுட்ப அதிகாரி கப்டன் எச்.எஸ். வீரசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.