கல்முனை மாநகர சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; மொட்டுக்கு ஆதரவளித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டதாக புகார்

🕔 August 21, 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ்,  நூருல் ஹுதா உமர் –  

ல்முனை மாநகர சபையில் இடம்பெறும் அரசியல் பழிவாங்கலுக்கு எதிராக, பொதுமக்கள் சிலர் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

ஜும்மா தொழுகையை தொடர்ந்து கல்முனை நகர் ஜும்மா பள்ளிவாசல் முன்றலில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கடந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டுச் சின்னத்திற்கு ஆதரவு தெரிவித்தமையை காரணம் காட்டி, தங்களை மாநகர சபை நிருவாகம் பணிநீக்கம் செய்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடோர் புகார் தெரிவித்தனர். 

அதேவேளை கல்முனை மாநகர சபையில் அதிகார துஸ்பிரயோகம் ஊழல்கள், மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்சியாக நடைபெற்று வருவதாகவும், இதனை குறித்த துறைக்கான உயரதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறினர்.

மாகாண ஆணையாளர், கல்முனை மாநகர ஆணையாளர், முதல்வர், அடங்கலாக உயரதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தை விழித்து எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்திக்கொண்டு கல்முனை நகர் ஜும்மா பள்ளிவாசல் முன்றலிலிருந்து கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை மாநகர சபை அமைந்துள்ள வளாகம் வரை நடைபவனியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

கல்முனை மாநகர சபையில் ஊழல்கள் நடைபெற்று வருவதாகவும், சிற்றூழியர்கள் அரச அதிகாரிகளால் அடிக்கடி தாக்கப்படுவதாகவும், ஆர்ப்பாட்டகாரர்கள் இதன்போது குரலெழுப்பி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது; “தற்போதைய நீதியமைச்சர் கௌரவ அலி சப்றி அவர்கள் அன்று கல்முனை பிரதேசத்திற்கு வந்த போது நான் மாலை அணிவித்து வரவேற்றேன். அதனால் மொட்டுக்கு ஆதரவு வழங்கினேன் என்று என்னை பணிநீக்கம் செய்துள்ளனர்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்