பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா தொற்று: அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோர் யார்?

🕔 March 27, 2020

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

உலக நாடு ஒன்றின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது இதுவே முதல் தடவையாகும்.

பிரிட்டனின் சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹான்கா உம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டில் தன்னை மேட் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே பிரிட்டன் இளவரசர் சார்ல்ஸ் க்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

போரிஸ் ஜோன்சனுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அவர் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அலுவலர் பேராசிரியர் கிறிஸ் விட்டியின் ஆலோசனைக்கு ஏற்ப, பிரதமருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்று, பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.

“கடந்த 24 மணிநேரத்தில் எனக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டன. எனக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. என்னை நானே தனிமைப்படுத்திக்கொள்வேன். நாம் இந்த வைரஸுக்கு எதிராக போராட, காணொளி காட்சி சந்திப்புகள் மூலம் அரசு நடவடிக்கைகளுக்கு தலைமை ஏற்பேன்” என அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இளவரசர் சார்ல்ஸ் உம், கடந்த சில தினங்களாக தனது வீட்டில் இருந்தபடியே அலுவல் பணியை மேற்கொண்டு வருகிறார்.

பிரதமர் யாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்?

கொரோனா வைரஸ் தொற்றை பிரிட்டன் அரசாங்கம் கையாளும் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கும் அரசின் தலைமை விஞ்ஞானி மற்றும் சிலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் போரிஸ் ஜோன்சன்.

தற்போது ஜான்சன், தனது பணியை செய்யும் நிலைமையில் இருப்பதால், அவர் அவரது பணியை தொடர்ந்து செய்வார் என்று கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை பிரதமர் போரிஸ் ஜோன்சன் பணியில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அவருக்கு பதிலாக அவரது பணியை தொடர வெளியுறவுத்துறை செயலாளர் டோம்னிக் ராப் தயார் நிலையில் இருக்கிறார்.

சிறிது காலத்திற்கு முன்னர்தான், அந்நாட்டு சுகாதார அமைச்சர் நடைன் டோரிஸ் க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்போது பலருக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது.

அரசியல்வாதிகள் அதிகம் இருக்கும் வெஸ்ட்மின்ஸ்டர், நோய்த்தொற்று அதிகம் பரவும் இடமாக பார்க்கப்பட்டது.

அதிலிருந்து பல எம்.பிக்களும் அதிகாரிகளும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை, பிரதமர் போரிஸ் ஜோன்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் தலைமை விஞ்ஞானி சர் பேட்ரிக் வாலன்ஸ் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி கிரிஸ் விட்டி ஆகியோரும் இருந்தனர்.

அதன் பின்னர், ஆன்லைன் வழியாகதான் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ஆனால் இப்போதுவரை அவருக்கு எப்போது உடல்நிலை சரியில்லாமல் போனது, அவருக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகம் எப்போது எழுந்தது என்று எதுவும் தெரியவில்லை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்