ஜனாதிபதி கோட்டா, 10 நாட்களில் சாதித்தவற்றைப் பட்டியலிட்டு, ஊடகப் பிரிவு அறிக்கை

🕔 December 1, 2019

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று ஆட்சிக்கு வந்து 10 நாட்களில் செய்துள்ள பணிகள் என்னென்ன என்று குறிப்பிட்டு, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

ஊடகப் பிரிவின் பிரதி ஊடகப் பணிப்பாளர் மொஹான் கருணாரத்ன வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் பின்வரும் தகவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

1. மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதிப் பயிர்களின் இறக்குமதியை தடை செய்தமை.

2. 15 சதவீதமாகக் காணப்பட்ட வெற் வரியினை 8 சதவீதமாகக் குறைத்தமை.

3. தொலைபேசி கட்டணங்களுக்காக அறவிடப்பட்ட வரியினை 25 சதவீதம் குறைத்தமை.

4. அரச நிறுவனத் தலைவர்களின் நியமனத்துக்கு சிறப்பு வல்லுநர் குழுவின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளல்.

5. அரச நிறுவனங்களில் ஜனாதிபதி மற்றும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்களின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்துவதற்கு பதிலாக அரச இலச்சினையை காட்சிப்படுத்தல்.

6. இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சர்கள் எண்ணிக்கை 16ஆக மட்டுப்படுத்தி முன்மொழியப்பட்டுள்ளது. அமைச்சர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுமென மக்களுக்கு வாக்குறுதி அளித்தல்.

7. சுற்றாடல் தொடர்பில் பொலிஸார் மற்றும் ஏனைய தரப்பினரின் கவனத்தை பெற்றுக்கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள துரித வேலைத்திட்டம்.

8. ஒன்பது மாகாணங்களின் பாதுகாப்பு தொடர்பான விசேட பொறுப்பினை இராணுவத்தினர் ஏற்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டமை.

9. பெரும்பான்மை வாக்கு வங்கி பற்றிய நம்பிக்கையை வெளியிடல் மற்றும் அதனுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஏனைய இன மக்களுக்கும் அழைப்பு விடுத்தல்.

10. இந்தியா, சீனா போன்ற உலகின் வல்லரசு நாடுகள் இலங்கைக்கு வருகை தந்து, தம்மீது நம்பிக்கை வைத்து தமது தனித்துவத்தை மதிக்கும் வகையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்தல்.

11. ஜனாதிபதியின் ஆளணியினர், வாகனத் தொடரணி ஆகியவற்றை மட்டுப்படுத்தல் மற்றும் ஜனாதிபதி அவர்கள் தமது உத்தியோகபூர்வ இல்லமாக தனது தனிப்பட்ட வசிப்பிடத்தை தேர்ந்தெடுத்தல்.

12. கோதுமை மா கட்டுப்பாடு தொடர்பில் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக ஏனைய இறக்குமதியாளர்களுக்கும் கோதுமை மாவினை இறக்குமதி செய்வதற்கு வாய்ப்பளித்தல்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்