ஊடகவியலாளர் என்னலிகொட, பிள்ளையானின் பொறுப்பிலிருந்த முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்; புதிய தகவல்
ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்ட நிலையில், வெலிகந்த மன்னம்பிட்டி என்னும் பகுதியில் அமைந்திருந்த, இடைக்கால ராணுவ முகாமொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டு பின்னர், அவரது சடலம் கடலில் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட எக்னெலிகொடவின் சடலம், திருகோணமலை கடற்பரப்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராணுவப் புலனாய்வுப் பிரிவு தகவல்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் இந்தச் செய்தியினை வெளியிட்டுள்ளன..
கொலை செய்யப்பட்ட எக்னெலிகொட முன்னதாக சேருவில பிரதேசத்திலுள்ள சகதிக் குழியொன்றில் புதைக்கப்பட்டதாகவும், சடலம் மேலே வந்ததன் காரணமாக, திருகோணமலை கடற்பரப்பில் சடலத்தினை வீசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சேருவில பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த முகாமானது – கருணாவினாலும், அவருக்குப் பின்னர் பிள்ளையானினாலும் நிர்வாகம் செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆயினும், 2010ம் ஆண்டு ஆரம்பத்தில், இந்த முகாம் அகற்றப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்டு சேருவில முகாமில் ஒப்படைக்கப்பட்டபோது, அந்த முகாமின் பொறுப்பாளராக பிள்ளையான் செயற்பட்டார் என்றும், அந்த முகாமில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரதீப் எக்னலிகொட தொடர்பிலான விசாரணைக்கு, முக்கிய அமைச்சர் ஒருவர் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.