தெ.கி.பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் முதலாவது பேராசிரியராக, கலாநிதி ஜௌபர் நியமனம்

🕔 February 10, 2019

– ஐ.எல்.எம். றிசான் –

தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் முதலாவது பேராசிரியராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கலாநிதி அபூபக்கர் ஜௌபர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனத்தை பல்கலைக்கழகக் கவுன்ஸிலின் தலைவரும், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருமான பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், வழங்கியுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரியும் முதுமாணிப் பட்டதாரியுமான பேராசிரியர் ஜௌபர், தனது கலாநிதி பட்டப்படிப்பை சீனா, சியாமன் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார். இலங்கை, இந்தியா, வியட்னாம் ஆகிய நாடுகளில் தொழில்சார் டிப்ளோமாக் கற்கை நெறிகளையும் அவர் பூர்த்தி செய்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்பனவற்றில் மொத்தம் 24 வருட சேவையை நிறைவு செய்துள்ள பேராசிரியர் ஜௌபர், அதிகமான நாடுகளில் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைச் சமர்ப்பித்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

இவர் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம், அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மற்றும் கம்பளை ஸாஹிறா கல்லூரி (தேசிய பாடசாலை) என்பனவற்றின் பழைய மாணவராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்