சபாநாயகர் தலைமையில் மத நல்லிணக்க மாநாடு: அம்பாறையில் நடைபெற்றது

🕔 October 1, 2018

லங்கையில் நிலைபேறான தன்மைக்காக தேசிய மற்றும் மத நல்லிணக்க பிராந்திய மாநாடு, சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில், பௌத்த இஸ்லாமிய இந்து மத பெரியார்களின் பங்குபற்றுதலுடன், அம்பாறை மொண்டி ஹோட்டலில் இன்று திங்கட்கிமை காலை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விஷேடமாகப் பங்கேற்று, இன நல்லிணக்கம் தொடர்பான தமது கருத்துக்களையும், முன்மொழிவுகளையும், ஆலோசனைகளையும் வெளிப்படுத்தினர்.

குறிப்பாக, இந்த மாநாட்டில் தமிழ், முஸ்லிம் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றமை விஷேட அம்சமாகும்.

அமைச்சர்காளன ரிஷாட் பதியுதீன், டி.எம்.சுவாமிநாதன், எம்.எச்.ஏ. ஹலீம், ராஜாங்க அமைச்சர்  ஏ.எச்.எம். பௌசி மற்றும் பிரதி அமைச்சர்களான முத்து சிவலிங்கம், அலிசாஹிர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, எம்.ஐ.எம். மன்சூர், எஸ்.எம்.எம்.இஸ்மாயில் மற்றும் ஏ.எல்.எம். நஸீர் ஆகியோரும் பங்கேற்றிருந்ததோடு, தமது கருத்துக்களையும் வெளிப்படுத்தினர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபயின் தலைவர் ரிஸ்வி முப்தி, அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஆதம்பாவா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை வெளியிட்டனர். அத்துடன் வேடுவ சமூகத்தின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.    

“அம்பாறையில் ஏற்பட்டிருக்கும் காணிப் பிரச்சினையால் சமூகங்களுக்கிடையே நல்லுறவு சீர்குலைந்துள்ளது” என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு சுட்டிக்காட்டியதுடன், இதற்கென விஷேட குழுவொன்றை நியமித்து பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான மோசமான வன்முறைகளை அடுத்தே, இவ்வாறான தேசிய நல்லிணக்க முயற்சி சபாநாயாகர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டு, முதலாவது பிராந்திய மாநாடு கண்டியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

(அமைச்சர் றிசாட் பதியுதீனின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்