எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, தொடர்ந்தும் சம்பந்தனுக்கு வழங்க சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம்

🕔 August 7, 2018

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் பதவியை தொடர்ந்தும் ரா.சம்பந்தனுக்கே வழங்குவதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று திங்கட்கிழமை  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இந்த நிலைப்பாடு, இன்றையதினம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது.

இதன்போது எதிர்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை, சபாநாயகருக்கு சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவிற்கு வழங்குமாறு ஒரு குழுவும், குமார் வெல்கமவிற்கு வழங்குமாறு இன்னொரு குழுவும் தம்மிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர கூறியிருந்தார்.

இதேவேளை, அதிக உறுப்பினர்களைக் கொண்ட தங்களுக்கே எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று, சபாநாயகரிடம் ஒன்றிணைந்த எதிரணி தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.

இந்தநிலையிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிலைப்பாட்டை, இது தொடர்பில் சபாநாயகர் கோரி இருந்தார்.

இந்த நிலையில், ஒன்றிணைந்த எதிரணி என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோர் அனைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவானவர்களாவர்.

எனவே அவர்களில் ஒருவருக்கு எதிர்கட்சித் தலைவர் பதவியை வழங்குவது உசிதமில்லை என்று நேற்றை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்