மைத்திரியின் கைகளில்தான், நம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவு தங்கியுள்ளது: மஹிந்த ராஜபக்ஷ

🕔 April 1, 2018

– க. கிஷாந்தன் –

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோல்வியடைய செய்வதும், வெற்றியடைய செய்வதும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவின் கைகளிலேயே தங்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நுவரெலியா சீத்தாஎலிய பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை உல்லாச விடுதி ஒன்றின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, அங்கிருந்து வெளியேறுகையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறினார்.

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் மேலும் பதிலளிகையில்; “நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் மஹிந்த ராஜபக்ஷவின் வலது கையை இருக்கிப்பற்றினார்.

அதன்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தரும் வகையில், அனைவரும் என் கையை பிடிக்கின்றார்கள். இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் ஆதரவாகவே செயற்படுகின்றார்கள்.  ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், நாட்டின் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவிடமே கடைசி தீர்மானம் உள்ளது. ஆனாலும் நம்பிக்கையில்லா பிரேரணை சம்மந்தமாக பூரண நம்பிக்கையிருக்கின்றது.

பிரேரணையை ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையிலேயே தங்கியுள்ளது” என்றார்.

இதன்போது இடையில் குறிக்கிட்ட ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பார்த்து; ” நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நீங்கள் கையொப்பம் இடவில்லை. இதுதான் எனக்கும் பிரச்சினையாக இருக்கின்றது” என்றார்.

மேலும் அவர் ஆறுமுகன் கூறுகையில்; “மனிதனுக்கு இரண்டு கண்கள் உள்ளமை போல், எமக்கு ஒரு கண் மைத்திரிபால சிறிசேன என்றால் மற்றொரு கண் மஹிந்த ராஜபக்ஷ ஆவார்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்