நம்பிக்கையில்லா பிரேரணை; ரணிலுக்கு ‘குறி’ சொல்லும் மஹிந்த தரப்பு

🕔 April 2, 2018

– எம்.ஐ. முபாறக் –

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை, வாக்கெடுப்புக்காக வரும் நாள் நெருங்க நெருங்க, அது தொடர்பிலான செயற்பாடுகளும் விரைவு படுத்தப்பட்டுள்ளன.

பிரதமரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகளும், எப்படியாவது அவரைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியும் ஏட்டிக்குப் போட்டியாக ஓடித் திரிகின்றன.

குறிப்பாக, பிரேரணையைக் கொண்டு வந்துள்ள மஹிந்த அணியினர் ரணிலைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர்.

கட்சி மறுசீரமைப்பு பிரச்சினையை அடிப்படையாக வைத்து, ஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்துள்ள குழப்பத்தை சாதகமாகப் பயன்படுத்தினால் வென்றுவிடலாம் என்று மஹிந்த அணி நம்புகிறது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஆறு பேர் ரணிலை எதிர்த்து வாக்களிப்பதற்கும் மறுசீரமைப்பை வேண்டி நிற்போர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கும் தீர்மானித்துள்ளதால் மஹிந்த அணிக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியும் ரணிலை எதிர்த்து வாக்களித்தால் பிரேரணையை வென்றுவிடலாம் என்பது மஹிந்த தரப்பின் கணிப்பாகும்.

அவ்வாறு சுதந்திரக் கட்சி பிரேரணையை ஆதரித்து வாக்களித்தால் ரணிலுக்கு ஆதரவாக 80 க்கும் குறைவான வாக்குகளே கிடைக்கும் என்று மஹிந்தவின் குழு கணக்குப் போட்டுள்ளது.

சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களை ஓரிரு நாட்களுக்கு முன் சந்தித்துப் பேசிய மஹிந்த குழுவினர், இந்த தகவலை அவர்களிடம் தெரிவித்து பிரேரணைக்கு ஆதரவைக் கோரியது.

ரணிலை தோற்கடிக்க உதவினால் சுதந்திரக் கட்சி விரும்பும் ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கு தாம் ஆதரவு வழங்குவோம் என்று, மகிந்தவின் ஆட்கள் சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களிடம் வாக்குறுதியளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமருக்கு எதிராக சுதந்திரக் கட்சிக்குள் செயற்படும் அந்த முக்கியஸ்தர்களின் ஓட்டம் அதிகரித்துள்ளதாம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்