இனவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதற் கட்ட இழப்பீடு: ஹிஸ்புல்லா வழங்கி வைத்தார்

🕔 March 19, 2018
ண்டி மாவட்டத்தில் திகன உள்ளிட்ட பல பிரதேசங்களில் இனவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட இழப்பீடுகள் இன்று திங்கட்கிழமை  வழங்கப்பட்டன.

புனர்வாழ்வு அதிகாரசபை மற்றும் கண்டி மாவட்ட செயலகம் என்பவற்றின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற் மேற்படி இழப்பீடு வழங்கும் நிகழ்வில், ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கலந்து கொண்டு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டுத் தொகைகளை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான லாபீர் ஹாஜியார், ஹிதாயத் சத்தார், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, வன்முறையால் சேதமாக்கப்பட்டு, இதுவரை பதிவு செய்யப்பட்ட குண்டசாலை, அக்குரனை, பூஜாபிட்டிய, ஹரிஸ்பத்துவ மற்றும் கங்கஉட கோரள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 66 வீடுகள் மற்றும் 65 வியாபார நிலையங்களுக்கான  முதற்கட்ட நட்டஈடாக மொத்தம்  86 இலட்சத்து 79ஆயிரம் ரூபா வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்;

“வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் – பல கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு முறையாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்யவுள்ளேன். வன்முறைகளின் போது பாதிக்கப்படும் மக்களுக்கு தமது பாதிப்புக்களை சீர்செய்து கொள்வதற்காகவே முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. ஆனால், பாதிப்புக்கள் தொடர்பில் சரியான ஆவணங்கள் தயார் செய்த பின்னர், அமைச்சரவைப் பத்திரம் ஒன்றினை சமர்ப்பித்து பாதிப்புக்களுக்கான சரியான இழப்பீட்டினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டினைப் பெற்றுக் கொடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமும் அதன் அடிப்படையிலேயே என்னால் சமர்ப்பிக்கப்ட்டது.

வன்முறையால் சேதமாக்கப்பட்ட மதஸ்தலங்களுக்கு எம்மால் பத்து இலட்சம் ரூபா வரை இழப்பீடு வழங்க முடியும். அதற்கு மேலதிகமாக இழப்பீடு வழங்குவதாயின் அமைச்சரவைப் பத்திரமொன்றினை சமர்ப்பிக்க வேண்டும்.

இதேவேளை, இதுவரை புனர்வாழ்வு அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளே இன்று வழங்கப்படுகின்றன. மேலும், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமது பிரதேச செயலாளர்களை நாடி பதிவு செய்து கொள்வதன் மூலம், தமக்கான முதற்கட்ட இழப்பீட்டினைப் பெற்றுக் கொள்ள முடியும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் புனர்வாழ்வு அதிகார சபை நடமாடும் சேவைகளை தொடர்ந்து செய்து வருகின்றது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்