ஹக்கீம் எனும் பூதத்தை அடக்க, வாக்கு எனும் வேப்பிலைக் கொத்தால் அடிக்க வேண்டும்: பசீர் சேகுதாவூத்

🕔 December 25, 2017

– அஹமட் –

க்கீம் எனும் சுய நலப் பூதத்தை அடக்கி, மக்களின் காலடிக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு, இந்தத் தேர்தலில் வாக்குகள் எனும் வேப்பிலைக் கொத்தால், மக்கள் அடிக்க வேண்டும் என்று, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் கோரிக்கை விடுத்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸை அழிப்பது  தமது நோக்கமல்ல என்றும்,  அந்தக் கட்சியை மீட்பதுதான் தமது இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும்,  2010 ஆண்டிலிருந்து, தான் எடுத்த அரசியல் எத்தனங்கள் அனைத்தும், முஸ்லிம் காங்கிரசை – மக்களுக்கான கட்சியாக மீட்டு எடுப்பதற்கானதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் தோல்வியடைவேன்என்று ஹக்கீம் நம்பினார். அதன் பிறகு, கட்சிக்குள்  மாற்றுக் கருத்தின் தொல்லை ஒழியும் எனவும் அவர் எதிர்பார்த்தார்.

மகிழ்ச்சியில்லா செய்தி

தேர்தல் நடந்து முடிந்து மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் வாக்கெண்ணுதல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இரவு 11.00 மணியளவில் வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து லேக் டிறைவ் ஹோட்டலுக்கு அசதி போக்கும் நோக்கோடு வந்தேன். குளித்து தலை துவட்டும் போது, ஊடகவியலாளர் நண்பர் நூர்தீன் எனக்கு அவசரமாகத் தொலைபேசினார். “உடனடியாக வாக்கெண்ணும் நிலையத்துக்கு வாருங்கள். உங்களின் கட்சிக்கும் பிள்ளையானின் கட்சிக்கும் சிறு வித்தியாசத்தில் கடும் போட்டி நிலவுகிறது. நீங்கள் இங்கில்லாவிட்டால் எல்லாம் பிழைத்துவிடும்” என்று பதறினார். நான் உடனே ஓடிச்சென்று, வாக்கெண்ணும் பணியில் ஒன்றிப் போனேன்.

தலைவர் ஹக்கீம் அதிகாலை 2.00 மணிக்கு எனது தொலைபேசியில் தொடர்பு கொண்டு மட்டக்களப்பில் நிலவரம் என்ன என்று வினவினார். “இங்கு நமக்கு ஒரு ஆசனம் நிச்சயம்” என்றேன். “நமது கட்சி வேட்பாளர் எண்மரில் அவ்வாசனம் யாருக்குக் கிடைக்கும்” என்று கேட்டார். “எனக்குத்தான் கிடைக்கும்” என்று  மகிழ்ச்சியோடு சொன்னேன். அதனால், அவர் பெருமகிழ்ச்சி அடைவார் என்று நினைத்தேன். அப்படி நான் நினைத்ததில் தவறுகள் இல்லைதான்.

ஏனென்றால், 2000 ஆம் ஆண்டு தொடக்கம், 10 வருடங்கள் – கட்சிக்கு ஏற்பட்ட எல்லா சவால்களுக்கும் முகம் கொடுத்தவர்களில் நான் முதன்மையானவன்.  மேலும், ஹக்கீமுடைய  தனிப்பட்ட விவகாரங்களில் எனது உயிரை விடுவதற்கும் தயாராய் நின்று அவரைக் காப்பாற்றியவன் நான் மட்டும்தான்.

இவற்றினையெல்லாம் ஹக்கீம்தான் அதிகம் தெரிந்தவராவார்.

ஆனாலும், ‘தேர்தலில் நான்தான் வெல்வேன்’ என்று சொன்னதும், அவரால் அடுத்த வார்த்தை எதையும் பேசமுடியவில்லை. 05 நிமிடம் அமைதி நிலவியது. ஒன்றும் பேசாமல் தொலைபேசியை வைத்துவிட்டார். “அல்ஹம்துலில்லாஹ் நல்லது பஷீர்” என்றல்லவா அவர் சொல்லியிருக்க வேண்டும். அன்று அவருக்கு வேண்டியதெல்லாம்;  ‘கட்சிக்கு ஆசனம் கிடைக்கவேண்டும் அது நானாக இருக்கக் கூடாது’ என்பதுதான்.

நினைத்ததும், நடந்ததும்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று முஸ்லிம் ஊர்களிலும், தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துவிட்டு, காத்தான்குடியைச் சேர்ந்த உச்சபீட உறுப்பினர் முபீனுடன், தலைவர் பதுளைக்குப் பிரச்சாரத்துக்காகச் செல்லும் வழியில்; “இம்முறை பஷீர் வெல்ல முடியாது, ஓட்டமாவடியைச் சேர்ந்த லெப்பை ஹாஜியார்தான் வெல்வார்” என்று கூறியதாக பின்னர் ஊர்ஜிதமாகத் தெரிந்து கொண்டேன்.

ஹக்கீமுக்கு, அரசியல் ஞானமற்ற ஒருவரே மட்டக்களப்பின் பிரதிதிதியாக தேவைப்பட்டார். கேள்வி கேட்கக் கூடாது, தலைவர் சொல்வதையும் செய்வதையும் தலையாட்டி – ஆமாம் சாமி போடுபவர்கள்தான், கிழக்கில் அவருக்குத் தேவைப்பட்டனர். ஆனால் 2010 இல், நான் வென்று நாடாளுமன்ற உறுப்பினரானேன்.

2000 ஆம் ஆண்டில் எனது வாய் – ஹக்கீமுக்கான ஆலோசனைக்குரியதாகவும், மனம் – மக்கள் விசுவாசத்துக்கானமாகவும் இருந்தது. ஆனால், இப்போது, வாய் – துப்பாக்கியாகவும், மனம் – மக்கள் மன்றமாகவும் மாறிப் போயுள்ளன. 2015 ஆம் ஆண்டு, கட்சியில் எனக்கு தேர்தல் வாய்ப்பை ஹக்கீம் மறுத்தமைக்கான காரணம்; 2010 இல் வென்றதைப் போல், பஷீர் வென்று விடுவான் என்ற அவருடைய அச்சமாகும். இந்தப் பின்புலக் காட்சிக் கதையின் விளைவாகத்தான், றவூப் ஹக்கீமின் எதேச்சாதிகாரம், இன்று தூள் தூளாகி வருகிறது.

நான் – அரசியல் அதிகாரம் இல்லாதிருந்தாலும், அரசியல் அறிவு இல்லாதவனல்ல என்பதை ஹக்கீம் நன்கறிவார். நான் கட்சியில் தொடர்ந்திருக்கவும் வேண்டும், அவருக்கு தேவைப்படும் போதெல்லாம் கட்சியின் புத்தி ஜீவிகளையும், விசுவாசிகளையும், கிழக்கு நேசர்களையும் கடித்துக் குதற அவ்வப்போது ‘றெகுலா பல்’ முளைக்கவும் வேண்டும் என்று அவர் விரும்பினார். இதற்காகத்தான் 2015 ஆம் ஆண்டு, கட்சியின் யாப்பில் ‘அடிமைச் செயலாளர்’ பதவியை உருவாக்கினார்.

அடங்க மறுத்த ஹசனலி

எனது கதைக்குச் சமாந்தரமான ஒரு கதை – நண்பர் செயலாளர் நாயகம் ஹஸனலிக்கும் உண்டு. 2008 இல் இடம்பெற்ற முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவதற்கு தடையாக ஹஸனலி இருந்தார். கிழக்கு முஸ்லிம்களுடைய காணி விடயங்களில் விட்டுக் கொடுப்புக்குக்கு அவர் உடன்படாதிருந்தார். எழுத்து மூல ஒப்பந்தங்கள் இல்லாது, எந்தத் தேசியக் கட்சிகளுடனும் கூட்டணியமைக்க மறுத்தார். இறுதியாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுடன் கூட்டுச் சேர மறுத்து, நிஸாம் காரியப்பரின் வீட்டில் எதிரணிக்கு தேர்தல் வேலை செய்யும் வகையில், கட்சி முக்கியத்தர்களை இணைத்து கூட்டம் போட்டார். இவை போன்ற நடவடிக்கைகளால் ஹக்கீம், ஹஸனலி மீது பல்லைக்கடித்தபடி – முகம் பார்த்துச் சிரித்து அவருக்கு கழுத்தறுத்தார்.

எனது அரசியல் நகர்வுகளும், ஹஸனலியின் நகர்வுகளும் ஒத்த பாதையில் செல்லவில்லை. ஆயினும் கிழக்கின் உச்சத்தை தொடுவதில் சமாந்தரமான பயணங்களாக இருந்தன.

வினை அறுத்தல்

எனவேதான், கட்சி யாப்புத் திருத்தம் மூலம் – ஹக்கீம் தனது சுய திருத்தல யாத்திரையைத் தொடர முனைந்தார். இந்த யாத்திரைதான், இன்று அவரை தோல்வியின் நித்திரைக்கு அழைத்துச் செல்கிறது.

இந்த நித்திரைக்கான நித்திய யாத்திரையை நிகழ்தகவான பயணமாக்குவதை அடிப்படையாகக் கொண்டே, கட்சியின் உச்சபீட உறுப்பினர் பலரின் துணையுடன் கடந்த மூன்று வருடங்களாகச் செயல்பட்டு வருகிறோம்.

இதற்காகத்தான் – தாறுஸ்ஸலாம் கொள்ளை, யாப்புத் திருட்டு, நிதிய மோசடி, அஷ்ரஃப் கொலை விசாரணை,குமாரி விவகாரம், கூட்டமைப்பு உருவாக்கம், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு உருவாக்கம் மற்றும் தற்போதைய உள்ளாட்சித் தேர்தல் தேர்தலில் பங்குபற்றல் ஆகிய விடயங்களைக் கையாண்டுவருகிறோம்.

ஹக்கீமின் குத்தாட்டங்கள் அனைத்தையும் ‘அசிட்’டைக் கொண்டு களுவி கொடியில் காயப் போட்டுள்ளோம். வெய்யில் எறிக்காவிட்டால் பரவாயில்லை, கொஞ்சம் காற்று வீசும் வேளை – இவை உலரத்தொடங்கும் போது, எல்லாமே மக்களுக்கு புலனாகும். புலனாகும் போது இது மக்களுக்கே பலனாகும்.

பூதமும் மந்திரமும்

நமது கட்சியை அழிப்பதல்ல, நமது கட்சியை மீட்பதே நமது இலக்கு. நாமே மந்திரம் ஓதி ஆடவைத்த ஹக்கீம் எனும் சுய நலப் பூதத்தை அடக்கி, மக்களின் காலடிக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு – இந்தத் தேர்தலில் அவரின் தலையில் மக்கள் மீண்டும் மாற்று மந்திரம் ஓதி, வாக்குகள் எனும் வேப்பிலைக் கொத்தால் அடிக்க வேண்டும். தேர்தலில் அவரைத் தோற்கடிக்க வேண்டும். இது நிகழ்ந்தால், ஹக்கீம் உண்மையை உணரும் வாய்ப்பு ஏற்படலாம், இல்லாவிட்டாலும், கட்சி மக்களுடையதாகும். நாம் என்றென்றும் – பதவிகள் எவையும் வேண்டாதவர்களாக உங்களோடு இருப்போம்.

எந்தத் தேசியக் கட்சியின் தலைவர்களும் கற்பிக்கும் பாடத்தை விடவும், மக்கள் கற்பிக்கும் பாடமே சிறந்தது.

அது – அரசியலில் குலை நடுங்கும் அச்சத்தைப் போதிப்பது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்