ஐ.தே.கட்சி தனித்து ஆட்சியமைத்தால், த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்கும்: சுமந்திரன் உறுதி

🕔 November 29, 2017

க்கிய தேசியக் கட்சி தனியாக ஆட்சிமைக்கும் பட்சத்தில், அதற்கு  தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேசளவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றின் போதே, இதனை அவர் கூறினார்.

கூட்டாட்சியிலிருந்து சுதந்திரக்கட்சி வெளியேறினால், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்கு, த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்குமா என, முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்படி விடயத்தை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

“இந்த விடயம் தொடர்பில், ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி எம்முடன் பேசியுள்ளது. தற்போதைய அரசசாங்கத்திலிருந்து சு.கட்சி வெளியேறினாலும், ஐ.தே.கட்சியால் ஆட்சியமைக்க முடியும். ஆனால் தீர்மானங்களை தனித்து நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை இருக்காது.

எனவே, அவ்வாறான சந்தர்ப்பங்களில் விடயங்களைப் பொறுத்து, ஆதரவை வழங்குவோம் என கூட்டமைப்பு உறுதியளித்துள்ளது. இவ்வாறானதொரு முடிவில்தான் ஜே.வி.பி.யினரும் உள்ளனர் போல் தெரிகிறது.

எவ்வாறாயினும் புதிய அரசியல் யாப்பினை வென்றெடுப்பதற்கு தேசிய அரசாங்கம் தொடர வேண்டும்.

அந்த எதிர்பார்ப்பு நிறைவேறத் தவறும் போது, அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டிய தேவை த.தே.கூட்டமைப்புக்கு உள்ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்