பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாமென வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம்

🕔 April 2, 2017

– க.கிஷாந்தன் –

வெளிநாடுகளுக்கு பெண்களை அனுப்பி அடிமை தொழிலில் ஈடுப்படுத்துவதை தவிர்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கையில் உறுதிப்படுத்த வேண்டும் என வழியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு – இன்று ஞாயிற்றுக்கிழமை மஸ்கெலியா நகர பஸ் நிலையத்திற்கு அருகாமையில் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்; “வெளிநாட்டில் அடிமை தொழில் செய்வதற்கு பதிலாக பாதுகாப்பான தொழிலை உறுதி செய், மலிவான பணியாளர்களாக பெண்கள் வெளிநாட்டுக்கு விற்கப்படுவதை நிறுத்து, வெளிநாட்டில் அனர்த்தங்களுக்கு உள்ளானவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கு, வெளிநாட்டிலுள்ள பணிப்பெண்களின் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

பொருளாதார கொள்கைக்காக மலையக பெண்களை மட்டுமன்றி நாட்டில் அனைத்து பிரதேச பெண்களையும் வெளிநாட்டு தொழிலுக்காக அனு ப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி, மேற்படி பெண்கள் அமைப்பினர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அண்மையில் மஸ்கெலியா பிரதேசத்தில் மத்தியகிழக்கு நாடு ஒன்றுக்கு பணிப்பெண்ணாக சென்று 04 மாதங்களின் பின்னர், சடலமாக கொண்டு வரப்பட்ட கற்பகவள்ளியின் குடும்பத்தாரையும், மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்புரிந்து பாதிக்கபட்ட மஸ்கெலியா பிரதேசத்தை சேர்ந்த பெண்களுடைய குடும்பத்தாரையும் இணைத்துக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது மலையகம் மற்றும் ஏனைய பிரதேச பெண்களை வெளிநாட்டு வேலைக்காக அனுப்புவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்