தாருஸ்ஸலாம் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு, பேரியலுடன் பேசியிருக்கிறோம்: மு.கா. தலைவர்

🕔 February 13, 2017

Hakeem - 01143– பிறவ்ஸ் முஹம்மட் –

தாருஸ்ஸலாம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்றும், இதன்பொருட்டு, பேரியல்அஷ்ரப்புடன் மு.காங்கிரஸ் சார்பாக கலீல் மௌலவி பேசியுள்ளார் எனவும் மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

திருகோணமலைக்கு வழங்கப்பட்டுள்ள தேசியப்பட்டியலை பங்கீடு செய்வதற்கு தான் யோசித்துக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்27ஆவது பேராளர் மாநாடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில்  கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்;

தலைமைத்துவம் எனும் முற்கீரிடத்தை கடந்த 16 வருடங்களாக நான் தலையில் சுமந்துவருகிறேன். இந்த தலைமைத்துவம் நேர்மையாக, சட்டபூர்வமாக மாறுமென்றால், எனது பதவியை தட்டில் வைத்து தாரைவார்த்துக் கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

நான் மீண்டும் தலைவராக வரவேண்டும் என்று ஹஸன் அலிதான் எனது பெயரை பிரேரித்தார். அவருடைய அந்த நல்ல மனதுக்கு நான் என்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பாமர மக்களுக்கு அரசியல் அந்தஸ்தை வழங்குகின்ற கட்சி என்றால் அது முஸ்லிம்காங்கிரஸ் மட்டுமே.

பேராளர் மாநாட்டில் பல குழப்பங்கள் நடைபெறும் என்று வெளியிலிருந்து பலர் தம்பட்டமடித்துக்கொண்டிருக்கும் நிலையில், கட்சியைப்பாதுகாக்க வேண்டும் என்று நேரகாலத்துடன் பேராளர்கள் இங்கு அணிதிரண்டு வந்து எமக்கு ஆதரவுக்குரல் வழங்கியுள்ளனர். கட்சிக்குபிரச்சினை வருகின்றபோது அதைக் காப்பாற்றுவது தலைமை அல்ல, போராளிகள்தான்.

கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளை வெளியில் பூதாகரமாக்குவதற்கு நாங்கள் தீனிபோட வேண்டிய அவசியமில்லை. அன்று கட்சிக்குள் இருந்துகொண்டு குழிபறித்தவர்கள் இன்று வெளியில் இருந்துகொண்டு குழிபறிக்கின்றனர்.

திருகோணமலைக்கு வழங்கப்பட்டுள்ள தேசியப்பட்டியலை பங்கீடு செய்வதற்கு நாங்கள் யோசித்துக்கொண்டிருக்கிறோம். தற்போது பாரியபிரச்சினையாக எழுந்துள்ள தேசியப்பட்டியல் விவகாரத்துக்கு தாமதிக்காமல் விரைவில் தீர்மானம் எடுக்கவுள்ளோம். எதிர்பார்ப்புடன் இருப்பவர்கள் பொறுமையுடன் இருக்கவேண்டும். அவர்களுடைய எதிர்பார்ப்புகளில் ஒருபோதும் மண்ணை அள்ளிப் போடமாட்டோம்.

தேசியப்பட்டியல் விடயத்தில் சரியான நேரத்தில் எடுக்கின்ற சரியான முடிவாக அது இருக்கவேண்டும். இதன்போது கட்சிப் பாதுகாப்பு கவனத்திற் கொள்ளப்படுவது மிக முக்கியமானது. கட்சிக்குள் குறுபடிகள் ஏற்படாத வகையில் தேசியப்பட்டியல் பகிரப்படவேண்டும்.

தாருஸ்ஸலாமில் இரகசியங்கள் இருப்பதாக களவாக புத்தகம் அடித்து வீட்டுக்கு வீடு பங்கிடுகின்றனர். அதில் சமர்ப்பணம்செய்யப்பட்டவர்களின் பெயர்களைப் பார்க்கும்போதே, அதை யார் வெளியிட்டார்கள் என்பதை அவர்களாகவே காட்டிக் கொடுத்துவிடுகிறார்கள். தாருஸ்ஸலாமில் எந்த ரகசியங்களும் இல்லை. அவை எல்லோருக்கம் தெரிந்த பரகசியமே.

தாருஸ்ஸலாமை நாங்கள் புதையல் அடைகாப்பதுபோல அவர்கள் பேசிக்கொண்டு திரிகின்‌றனர். இங்குள்ள கட்டிடங்கள் கூட மிகவும் பழமையடைந்துவிட்டன. அவற்றுக்குப் பதிலாக நாங்கள் தற்போது புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு யோசித்துக்கொண்டிருக்கிறோம்.

அஷ்ரப் ஆரம்பித்த நம்பிக்கை நிதியத்தை மீண்டும் கூட்டவேண்டும். அதில் நானும், சகோதரர் ஹாபிஸ்‌ நஸீரும், சல்மானும் மாத்திரமேதற்போது இருக்கிறோம்.

தாருஸ்ஸலாம் விவகாரம் தொடர்பில் கலீல் மெளலவி பேரியல் அஷ்ரபுடன் பேசியிருக்கிறார். இந்த விவகாரத்துக்கு நாங்கள் விரைவில் தீர்வினை வழங்குவோம். இதற்காக நாங்கள் யாப்பில் திருத்தங்களையும் மேற்கொள்ளவுள்ளோம். அம்பாறையிலும் ஒரு தாருஸ்‌ஸலாம் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதையும் நாங்கள் கட்டித் தருவோம்.

பின்வருவோர் மு.காங்கிரசின் நிர்வாக சபைக்கு தெரிவு செய்யப்பட்டனர்

௦1. தலைவர் – ரவூப் ஹக்கீம்

௦2. தவிசாளர் – தெரிவுசெய்யப்படவில்லை

௦3. சிரேஷ்ட பிரதித் தலைவர் – ஏ.எல்.ஏ. மஜீத்

௦4. பிரதித் தலைவர் 1 – ராவுத்தர் நெய்னா முஹம்மத்

௦5. பிரதித் தலைவர் 2 – ஹாபிஸ் நசீர் அஹமட்

௦6. பிரதித் தலைவர் 3 – யூ.டி.எம். அன்வர்

௦7. பிரதித் தலைவர் 4 – எச்.எம்.எம். ஹரீஸ்

௦8. பொதுச் செயலாளர் – மன்சூர் ஏ. காதிர்

௦9. பொருளாளர் – எம்.எஸ்.எம். அஸ்லம்

  1. மஜ்லிஸுல் ஷூரா தலைவர் – மௌலவி ஏ.எல்.எம். கலீல்
  2. தேசிய ஒருங்கிணைப்பாளர் – எம்.ஐ.எம். மன்சூர்
  3. கொள்கை பரப்புச் செயலாளர் – யூ.எல்.எம். முபீன்
  4. தேசிய அமைப்பாளர் – ஷபீக் ராஜாப்தீன்
  5. சர்வதேச விவகார பணிப்பாளர் – ஏ.எம். பாயிஸ்
  6. யாப்பு விவகார பணிப்பாளர் – எம்.பி. பாறூக்
  7. இணக்கப்பாட்டு வாரியம் – எம்.எஸ். தௌபீக்
  8. உலமா காங்கிரஸ் – மௌலவி எச்.எம்.எம். இஸ்யாஸ்
  9. அரசியல் விவகார பணிப்பாளர் – எஸ்.எம்.ஏ. கபூர்
  10. பிரதி தவிசாளர் – எம். நயீமுல்லாஹ்
  11. பிரதி செயலாளர் – நிஸாம் காரியப்பர்
  12. பிரதிப் பொருளாளர் – கே.எம்.ஏ. றஸாக் (ஜவாத்)
  13. செயற்குழு செயலாளர் – றிஸ்வி ஜவஹர்ஷா
  14. மஜ்லிஸுல் ஷூரா பிரதித் தலைவர் – சியாத் ஹமீட்
  15. பிரதி தேசிய ஒருங்கிணைப்பாளர் – ரஹ்மத் மன்சூர்
  16. பிரதி தேசிய அமைப்பாளர் – பைசால் காசீம்
  17. பிரதி கொள்கை பரப்புச் செயலாளர் – அலிசாஹிர் மௌலான
  18. அரசியல், சமய விவகார இணைப்பாளர் – எம்.ஏ. அன்சில்
  19. கல்வி, கலாசார இணைப்பாளர் – எஸ்.எல்.எம். கலீல்
  20. சமூக சேவை, அனர்த்த முகாமைத்துவம் – ஆர்.எம். அன்வர்
  21. இளைஞர், வேலைவாய்ப்பு – ஏ.எல். தவம்Hakeem - 01144

Comments

புதிது பேஸ்புக் பக்கம்