தவிசாளரும் வேண்டாம், தேசியப் பட்டியலும் வேண்டாம்: வீடு வந்த ஹக்கீமிடம் ஹசனலி தெரிவிப்பு
– முன்ஸி அஹமட் –
மு.காங்கிரசின் முன்னைநாள் செயலாளர் நாயகம் ஹசனலியின் வீட்டுக்கு நேற்று சனிக்கிழமை இரவு சென்றிருந்த அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம், மு.கா.வின் தவிசாளர் பதவியினைப் பொறுப்பேற்குமாறு வலியுறுத்தியதோடு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆயினும், அந்தக் கோரிக்கையினை ஹசனலி தட்டிக் கழித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மு.காங்கிரசின் வளர்ச்சியில் பாரிய பங்களிப்புக்களைச் செய்துள்ளளோடு, அந்தக் கட்சிக்குள் தவிர்க்க முடியாததொரு அடையாளமாகவும் இருந்து வரும் ஹசனலியை, கட்சிக்குள் ஒதுக்கும் நடவடிக்கையினை கடந்த சில வருடங்களாக ரஊப் ஹக்கீம் மேற்கொண்டு வந்தார்.
இதன் உச்ச கட்டமாக, கட்சிக்குள் ஹசனலி வகித்து வந்த செயலாளர் நாயகம் பதவியினையே, ஹக்கீம் இல்லாமல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மு.கா. தலைவருடன் உயர்பீட உறுப்பினர்கள் பலரும், நேற்றிரவு ஹசனலியின் வீட்டுக்குச் சென்று, கட்சியின் தவிசாளர் பதவியினை பொறுப்பேற்குமாறு வலியுறுத்தினர். மேலும், நாளை மறுதினம் வந்து தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைப் பாரமெடுங்கள் என்று, ஹக்கீம் கூறியுள்ளார்.
ஆயினும், “பசீரிடமிருந்து தட்டிப் பறித்த தவிசாளர் பதவியில், நான் ஒரு போதும் அமர மாட்டேன்” என்று கூறிய ஹசனலி; ‘ஹக்கீம் கூட்டத்தாரின் கோரிக்கையினை நிராகரித்து விட்டார் என தெரியவருகிறது.