மாவட்ட அமைப்பாளர் பதவி பறிக்கப்பட்டமை, புனரமைப்பு நடவடிக்கையாகும்: சு.க. செயலாளர்
🕔 August 18, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பினை மீறுகின்ற எந்தவொரு உறுப்பினரும், கட்சியிலிருந்து விலக்கப்படுவார்கள் என்று, அமைச்சரும் – சுதந்திரக் கட்சியின் செயலாளருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே, அவர் இதனைக் கூறினார்.
ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும், சுதந்திரக் கட்சியின் முன்னணி பிரமுகர்கள் பலர், அவர்களின் மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டமையானது, பழிவாங்கும் ஒரு நடவடிக்கை எனக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை, இதன்போது அமைச்சர் துமிந்த நிராகரித்தார்.
மேற்படி செயற்பாடானது கட்சியினை புனரமைக்கும் ஒரு நடவடிக்கையாகும் என்றும் அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும், ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் பலரை, சுதந்திரக் கடச்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று புதன்கிழமை – அவர்களின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.