நிருவாக பிரிவை மறுசீரமைக்குமாறு, அமைச்சர் ஹக்கீமிடம் முந்தல் பகுதி மக்கள் கோரிக்கை

🕔 June 2, 2016

Hakeem - Puttalam - 014
மூ
ன்று கிராமங்களுக்கு ஒரு கிராமசேவை பிரிவு என்ற அடிப்படையில், தமது பிரதேச நிருவாகம் மறுசீரமக்கப்பட வேண்டுமென்று  முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 06 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமிடம் கோரிக்கை விடுத்தனர்.

முந்தல் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட புளிச்சாக்குளம் 593 ஆம் கிராம சேவை பிரிவின் கீழுள்ள புளிச்சாங்குளம், வடபத்துளு ஓயா, கீரியங்கள்ளி, புதுக்குடியிருப்பு, ஐஞ்சுவத்த மற்றும் தாராக்குடிவில்லு கொலணி ஆகிய கிராம மக்களே இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, அரசாங்கத்தினால் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படும் நிதிகளை, குறித்த 06 கிராமங்களுக்கும் தனித்தனியாக உரிய முறையில் வந்துசேரும் விதத்தில் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அப்பிரதேசமக்கள் கேட்டுக்கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகரதிட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், இன்று வியாழக்கிழமை புத்தளத்தில் மக்கள் சந்திப்பொன்றினை நடத்தியபோதே. அவரிடம் மேற்கண்ட விடயங்களை மக்கள் கூறினர்.

தற்போது தத்தமது கிராமங்களுக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதிகள் போதாமல் உள்ளமையினால், அபிவிருத்தி நடவடிக்கைகள் யாவும் மந்தகதியில் முன்னெடுக்கப்படுவதோடு, தாம் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகுவதாகவும் அமைச்சரிடம் மக்கள் தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த 593ஆம் கிராம சேவை பிரிவின் கீழ் ஒதுக்கப்படும் நிதிகள், கீறியங்கல்லி பிரதேசத்துக்கு மாத்திரமே போதுமானதாக உள்ளமையால், இதர கிராமங்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் பிற்போடப்படுவதாகவும், இதனால் மக்கள் பலவித அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

எனவே, தனித்தனியாகவோ அல்லது மூன்று கிராமங்களுக்கு ஒரு கிராமசேவை பிரிவு என்ற அடிப்படையிலோ, தமக்கான கிராமசேவை பிரிவுகளை மறுசீரமைத்துத் தருமாறும், அரசாங்கத்தினால் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படும் நிதியினை குறித்த 06 கிராமங்களுக்கும் தனித்தனியாக உரிய முறையில் வந்துசேரும் விதத்தில் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பிரதேசமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மக்களின் கோரிக்கைகளை செவியேற்ற அமைச்சர் ஹக்கீம்; மேற்படிவிடயம் தொடர்பில் முழுமையான தகவல்களை திரட்டி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸுக்கு பணிப்புரை விடுத்தார். மேலும், இது சம்பந்தமாக உரிய அமைச்சரிடம் பேசி தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், வடமாகாண சபை உறுப்பினர் எச்.எம். றயீஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாபா பாறூக் மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என். முபீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.Hakeem - Puttalam - 012

Comments

புதிது பேஸ்புக் பக்கம்