
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்பாக இன்டர்போல் (INTERPOL) ஒரு ‘நீல அறிவிப்பை’ (Blue Notice) வெளியிட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கோரிக்கையின் பேரில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள அதேவேளையில், வெளிநாடுகளில் வசிக்கும் முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் தேடப்படும் பிற நபர்களைக் கண்டறிய, அரசாங்கம் சர்வதேச சட்ட அமுலாக்க வழிமுறைகளைப் பயன்படுத்தி வருவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.
பசில் ராஜபக்ஷ தற்போது இலங்கையில் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறார். அத்துடன் பல சந்தர்ப்பங்களில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியுள்ளார்.
மாத்தறை – எலியகந்த வீதியில் உள்ள பிரவுன்ஸ் ஹில் (Browns Hill) பகுதியில் 60 மில்லியன் ரூபாய்க்கு 1.5 ஏக்கர் நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் வழக்கு ஒன்றில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து, ஜூலை மாதத்தில் அவரை கைது செய்வதற்கான பிடியாணையை மாத்தறை பிரதம நீதவான் நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது.
நடந்து கொண்டிருக்கும் குற்றவியல் விசாரணைகள் தொடர்பாக, பசில் ராஜபக்ஷவின் அடையாளம், இருப்பிடம் அல்லது செயல்பாடுகள் குறித்த தகவல்களை சர்வதேச சட்ட அமுலாக்க நிறுவனங்கள் பெறுவதற்கு ஏதுவாக, அவர் மீது ஏற்கனவே ‘நீல அறிவிப்பு’ வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார்.
இவ்வழக்கு பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் தாக்கல் செய்யப்பட்டது. இதில் வேறு பல பிரதிவாதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பசில் ராஜபக்ஷ வெளிநாட்டில் வைத்திய சிகிச்சை பெற்று வருவதாக, அவரின் சட்டத்தரணிகள் முன்னதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதைக் கருத்தில் கொண்டு, அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையை நடைமுறைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்டர்போலின் ‘நீல அறிவிப்பு’ (Blue Notice) என்பது – ஒரு குற்றவியல் விசாரணை தொடர்பாக ஒரு நபரின் அடையாளம், இருப்பிடம் அல்லது செயல்பாடுகள் குறித்த கூடுதல் தகவல்களைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சர்வதேச எச்சரிக்கை அறிவிப்பாகும்.
இது ‘சிவப்பு அறிவிப்பிலிருந்து’ (Red Notice) மாறுபட்டது. சிவப்பு அறிவிப்பானது, வழக்கு விசாரணைக்காகவோ அல்லது தண்டனையை நிறைவேற்றுவதற்காகவோ தேடப்படும் ஒரு நபரின் இருப்பிடத்தைக் கண்டறியவும் அவரைக் கைது செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.



