தலைப்புச் செய்திகள்

குற்றச்சாட்டுக்குள்ளான அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதியை, சட்டமா அதிபர் ஆலோசனைப்படி விடுவிப்பதற்கு, சட்டத்தரணி சுமந்திரன் கடும் ஆட்சேபனை

ண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் நொத்தாரிஸ் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள, அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தனி ஜெயலக்ஷி டி சில்வாவை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கிய ஆலோசனைக்கு, பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேற்று (30) தனது கடுமையான ஆட்சேபனைகளை முன்வைத்தார்.

கல்முனை நீதவான் நீதிமன்னில் மேற்படி வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன், மேற்படி ஆட்சேபனையை வெளியிட்டார்.

வழக்குத் தொடுநர் சார்பாக – மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக் பண்டார ஆஜராவதற்கு சட்டத்தரணி சுமந்திரன் அடிப்படை ஆட்சேபனை தெரிவித்தார். சந்தேக நபர் சுமார் 20 வருடங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றியவர் என்பதால், இங்கு ஒரு தெளிவான அக்கறை முரண் (Conflict of Interest) இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இச்சம்பவம் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து, பல நீதியரசர்கள் சந்தேக நபருடன் பணிபுரிந்த காரணத்தால் விலகியுள்ளதையும், தற்போது நான்காவது தடவையாக புதிய நீதியரசர் குழாம் அமைக்கப்படவுள்ளதையும் அவர் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

சந்தேக நபரின் பெற்றோருக்கு எதிரான மட்டக்களப்பு நீதிமன்ற வழக்கில் (B/406/2011), சட்டமா அதிபர் காரியாலயம் தலையிட்டு அவர்களை விடுவித்தமையை குறிப்பிட்ட சுமந்திரன், நூற்றுக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கும் நிலையில் இந்த நீதிபதிக்காக மட்டும் மிக விரைவாக விடுவிப்பு ஆலோசனை வழங்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.

நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தும், சந்தேக நபரிடம் நேரடியாக வாக்குமூலம் பெறாமல், அவரின் மெய்ப்பாதுகாவலர் மூலம் தகவல் பெறப்பட்டதை அவர் விமர்சித்தார். இன்றுவரை சந்தேக நபரின் வாக்குமூலச் சுருக்கத்தை மன்றுக்கு சமர்ப்பிக்காமல், நேரடியாக சட்டமா அதிபருக்கு அனுப்பியமை பாரதூரமான விடயம் என வாதிடப்பட்டது.

சட்டமா அதிபரின் ஆலோசனை – பொலிஸாரை கட்டுப்படுத்தினாலும், அது நீதிமன்றத்தை கட்டுப்படுத்தாது என குறிப்பிட்ட சுமந்திரன், குற்றவியல் நடைமுறை கோவை பிரிவு 120(3) இன் கீழ், நீதவானுக்கே இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளதாக வலியுறுத்தினார்.

விடுவிப்பு ஆலோசனையை நீதவான் பின்பற்றத் தவறினால் அது “ஆற்று வெள்ளத்தைத் திறந்துவிட்டது போல” (Opening floodgates) பல விபரீதங்களுக்கு வழிவகுக்கும் என்றும், ஆட்சேபனைகள் இருப்பின் அதனை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.

2022 ஆம் ஆண்டு தொழிலதிபர் மஹாதேவன் முரளிதரனால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 486 மற்றும் 344 இன் கீழ் இந்த வழக்கு பெரியநீலாவணை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டது.

30-ஆம் திகதி இந்த வழக்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட மகாதேவன் முரளிதரன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், என். சிவரஞ்சித், ஏ.எல். ஆசாத், சுஹால் பிஸ், டி. மதிவதனன், பி. துஷான், அ.நிதான்சன், ரிப்கோன் கரீம் ஆகியோருடன் மேலும் பல சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.  

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனையின் பேரில், பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி. கஜேந்திரன் தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதவான் கே.எல்.எம். சாஜித்:

1. வழக்கினை வரும் ஏப்ரல் 20, 2026 வரை ஒத்திவைத்தார்.
2. சந்தேக நபரின் வாக்குமூலம் உள்ளிட்ட முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
3. மேலதிக நடவடிக்கைகள் குறித்து மே 04, 2026 அன்று அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.