
வீசா வழங்குவதில் முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட முறையை நேற்று (26) நள்ளிரவு முதல் உத்தியோகபூர்வமாக மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் சர்ச்சைக்குரிய வி.எஃப்.எஸ் வீசா முறைமை நிறுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்துக்கு வருகைதரும் போது வழங்கப்படும் நுழைவு அனுமதியானது, கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி முதல் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளிடம் வீசா கட்டணத்துக்கு மேலதிகமாக சேவைக் கட்டணம் அறிவிடப்படுவதாலும் வீசா வழங்கப்படும் முறைமையில் தாமதம் காரணமாகவும் பல சந்தர்ப்பங்களில் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டன.
இதன் காரணமாகப் பல தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டு வந்த நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், ரஊப் ஹக்கிம் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.
குறித்த மனுவைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இலத்திரனியல் வீசா வழங்கும் முறைமையைத் தனியார் நிறுவங்களுக்கு வழங்குவதை தடுத்து – ஓகஸ்ட் 02ஆம் திகதி இடைக்கால உத்தரவைப் பிறப்பித்ததிருந்தது.
எனினும் குறித்த உத்தரவு அமுல்படுத்தபடாமையால், நீதிமன்றத்தை அவமதித்ததாகத் தெரிவித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை இந்த வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, சர்ச்சைக்குரிய வி.எஃப்.எஸ் வீசா முறைமைக்குப் பதிலாக நேற்று நள்ளிரவு முதல் – பழைய முறைமையை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்ததாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.



