தலைப்புச் செய்திகள்

விடுமுறையில் வெளிநாடு சென்றோர், உரிய தினத்தில் கடமைக்கு திரும்ப வேண்டும்: இல்லாவிட்டால் வேலை ‘காலி’

– அஸ்ஹர் இப்றாஹிம் –

ம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற அரச உத்தியோஸ்தர்கள், ஊழியர்கள், விடுமுறை நிறைவடைந்த பின்னர் – உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காவிட்டால், சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியான சுற்று நிருபத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வெளிநாட்டு விடுமுறை காலத்தை நீடிக்க வேண்டுமாயின் முதலாவது விடுமுறை காலம் நிறைவடைவதற்கு முன்னர் அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அரச நிறுவன பிரதானிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை காலத்தை நீடித்துக்கொள்ளும் அனுமதியை பெறுவதில் ஏற்படும் சிக்கல் ஏற்கனவே பெறப்பட்ட விடுமுறை காலப்பகுதிக்குள் தீர்க்கப்படாவிட்டால் உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்க வேண்டியது கட்டாயமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அரச ஊழியர்களின் வெளிநாட்டு விடுமுறை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தை மீறும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக – சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொதுநிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.