ரஃபா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு, சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவு
![](https://puthithu.com/wp-content/uploads/2024/05/International-Court-of-Justice-0123-1024x341.jpg)
காஸாவின் தெற்கு நகரமான ரஃபா மீது நடத்தும் ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு, ஐக்கிய நாடுகள் சபையின் உச்ச நீதிமன்றமான – சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) – இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், அங்குள்ள நிலைமையை ‘பேரழிவு’ என்றும் அந்த நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
ரஃபா மீது நடத்தப்படும் தாக்குதல் காரணமாக – இரண்டு வாரங்களில் 09 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு தங்குமிடம், உணவு, தண்ணீர் மற்றும் மருந்து உள்ளிட்ட பல தேவைகள் தற்போது கிடைக்காமல் உள்ளன.
அல்-அக்ஸா தியாகிகள் வைத்தியப் பணிப்பாளர் இந்த நிலை குறித்து கூறுகையில், ”மின்சாரத்தை வழங்கும் ஜெரேட்டர்களுக்கு எரிபொருள் இல்லை என்றும், அதனால் அங்கு மின்சாரம் இல்லை” எனவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அனைத்து நோயாளிகளும் மரணத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் துருப்புக்கள் ரஃபாவின் தென்கிழக்கு நகரின் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட மேற்கு மாவட்டத்தை நோக்கி முன்னேறியுள்ளன.
ஒக்டோபர் 07 தொடக்கம் காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 35,800 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 80,011 பேர் காயமடைந்துள்ளனர்.