சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த, வட மாகாணத்துக்கு மேலும் நனோ நீர் சுத்திகரப்பு இயந்திரங்கள்

🕔 March 31, 2024

– முனீரா அபூபக்கர் –

டமாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும் அந்தப் பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அதன்படி, 24 நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் ஏப்ரல் 06ஆம் திகதி – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட உள்ளன.

வவுனியா மாவட்டத்தில் 06 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் – மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களில் இந்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவை வவுனியா மாவட்டத்தின் வவுனியா, வவுனியா வடக்கு, வெங்கலச்சிக்குளம், வவுனியா தெற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி, கரைச்சி மற்றும் கண்டாவளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

‘அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்’ என்ற அரசாங்கத்தின் எண்ணக் கருவின் கீழ், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின்படி, அந்த அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்றப் பிரிவு, சமூக நீர் திணைக்களத்துடன் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், வட மாகாணத்தில் 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 04 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 23 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டன. இதன் மொத்த திட்ட மதிப்பு 211 மில்லியன் ரூபாவாகும். முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில், முதல் கட்டமாக, 26 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் 16,480 குடும்பங்கள் பயனடைவார்கள்.

இந்த நனோ நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நாளொன்றுக்கு சுமார் 2,000 லீற்றர் தண்ணீரை முழுவதுமாக சுத்தம் செய்யும் திறனைக் கொண்டது என்று மீள்குடியேற்ற பிரிவு தெரிவிக்கிறது.

நனோ தொழில்நுட்பம் மூலம் – நீரைச் சுத்திகரிக்கும் போது நீரிலிருந்து அதிக உப்புகளை நீக்குகிறது. நனோ சுத்திகரிப்பின் மூலம் நச்சுக்கள், பார உலோகங்கள் மற்றும் ஏனைய சேதன ரசாயன உலோகங்கள் அகற்றப்பட்டு நீரின் சுவையும் துர்நாற்றமும் நீக்கப்படும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்