மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு எதிரா வழக்குத் தாக்கல்
இலங்கை மத்திய வங்கியின்முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட ஐந்து நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முடித்துக்கொண்ட – லஞ்ச ஆணைக்குழு, நேற்று முன்தினம் (26) கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு இலக்கம் 271/2024 இன் கீழ் சட்ட நடவடிக்கையை ஆரம்பித்தது.
2012 ஆம் ஆண்டு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்த கிரீஸ் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட திறைசேரி உண்டியல்களை, இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்தமைக்கு எதிராக இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.
கிரீஸ் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியை அறிந்திருந்தும் இந்த கொள்வனவு மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் மூலம் இலங்கை அரசுக்கு 1.80 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சேனசிங்க தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், அஜித் நிவாட் கப்ரால், கங்கணம்கே கமகே டொன் தர்மசேன தீரசிங்க, பென்டாரகே டொன் வசந்த ஆனந்த சில்வா, சந்திரசிறி ஜயசிங்க பண்டித சிறிவர்தன மற்றும் ஹரங்கஹா ஆராச்சிலாகே கருணாரத்ன ஆகியோருக்கு எதிராக – கொழும்பு மேல் நீதிமன்றத்தில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.