பஸ் விபத்தில் ஒருவர் பலி, 37 பேர் காயம்: பேராதனையில் சம்பவம்
பேராதனை – யஹலதென்னை பகுதியில், நெல்லிகலையில் இருந்து பூண்டுலோயா நோக்கிப் பயணித்த பஸ் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர்.
நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்துக்கு விஜயம் செய்துவிட்டுத் திரும்பிய பக்தர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
சாரதி கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாக, பஸ் வண்டி – மரத்தின் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
பஸ் வண்டியின் சாரதி உட்பட காயமடைந்தவர்கள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 79 வயதுடைய பயணி ஒருவரே உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பூண்டுலோயா – ஹல்பொல பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவேளை படுகாயமடைந்த இருவர் ஆபத்தான நிலையில் கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.