யானை தாக்கி மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றும் இன்றும் இருவர் உயிரிழப்பு

🕔 March 17, 2024

ட்டக்களப்பு மாவட்டத்தில் யானை தாக்கியதில் நேற்றும் (16) இன்றும் இருவர் மரணமடைந்தனர்.

ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவு ஈரளக்குளத்தில் நேற்றிரவும், கிரான் பிரதேச செயலக பிரிவு திகிலிவெட்டையில் இன்று அதிகாலையிலும் யானைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர்.

ஆவெட்டியாவெளியில் மாடு வளர்ப்பில் ஈடுபட்ட, சித்தாண்டியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான பத்மநாதன் மோகனதாஸ் (வயது 45) என்பவர், நேற்று மாலை உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று, பண்ணையை நோக்கி இரவு 09 மணியளவில் நடந்து செல்லும்போது ஈரளக்குளத்தில் வீதியோரமாக நின்ற யானையொன்றினால் தாக்குண்டுடதில் சம்பவ இடத்திலேயே மரணித்தார்.

திகிலிவெட்டை, குளத்துவெட்டையை சேர்ந்த நாகராசா முரளிதரன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தந்தை, நண்பர் ஒருவருடன் நள்ளிரவு வேளை வலைவீசி மீன் பிடிக்கச் சென்று அதிகாலை வேளை குளத்தின் ஓரமாக நின்ற மரத்தின் கீழ் படுத்துறங்கிய போது, யானையின் தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே மரணித்தார்.

இரு வெவ்வேறு பிரதேச செயலகப்பிரிவுகளிலும் நடைபெற்ற மேற்படி மரணங்கள் தொடர்பான விசாரணைகளை , திடீர் மரண விசாரணை அதிகாரிகளான எம்.எஸ்.எம் .நஸீர், கே. பவளகேசன் ஆகியோர் கரடியனாறு மற்றும் சந்திவெளி பொலிஸாருடன் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று மேற்கொண்டனர்.

இரு சடலங்களும் உடற்கூறு பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவிருக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் யானையின் தாக்குதல்களால் விவசாயிகள், பண்ணையாளர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்