கடமை தவறிய இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்கள் பணி இடைநிறுத்தம்
கடமை தவறினார்கள் எனும் குற்றசாட்டில், அம்பலாங்கொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் வியாபாரியுமான ‘சமன் கொல்ல’ என்பவரின் வீட்டில் அண்மையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இது தொடர்பில் பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவல் தொடர்பில், பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு அறிவிக்காமையே – இந்த பணி இடைநிறுத்தத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது அம்பலாங்கொட பொலிஸ் நிலையத்தில் தொலைபேசி இயக்குனராகவும், கணனி இயக்குநராகவும் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்களே இவ்வாறு பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட இரு பொலிஸாரிடமும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.