அமெரிக்க பிரதிநிதி – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: ஹூதிகள் தொடர்பிலும் பேச்சு

🕔 February 23, 2024

னாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி ராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வெர்மாவுக்கும் (Richard Verma) இடையிலான சந்திப்பொன்று இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதி ராஜாங்க செயலாளர் இதன்போது பாராட்டுத் தெரிவித்தார்.

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் உட்பட இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைகளின் முன்னேற்றம் குறித்து, அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்தார்.

உலக பாதுகாப்பு தொடர்பான விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், செங்கடலில் இடம்பெறும் கடற்படை நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய ஆதரவுக்கு பிரதி ராஜாங்க செயலாளர் நன்றி தெரிவித்தார்.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்பில் சவூதி அரேபியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவு தெரிவித்த ஜனாதிபதி, இந்து சமுத்திரத்தின் சுதந்திரமான கடற்பயணத்திற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிக்கும் எனவும் உறுதியளித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பதில் செயலாளர் யூ.எல்.எம். ஜோஹர், சர்வதேச உறவுகள் பணிப்பாளர் தினுக் கொழம்பகே, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அமெரிக்க பிரிவின் பணிப்பாளர் சதுர் பெரேரா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்