10 லட்சம் மின் இணைப்புகள் 2023ஆம் ஆண்டில் துண்டிப்பு
நாட்டில் 2023 ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 01 மில்லியன் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிப்பதற்கான நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக் குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உட்பட பல நிறுவனங்களுடனான சந்திப்பு நேற்று (22) நடந்த போது – இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டதாக குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
இதன்போது, துண்டிக்கப்பட்ட இணைப்புகளை உடனடியாக மீள் இணைப்புக் கட்டணத்தை அறவிடாமல் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வலேபொட கேட்டுக்கொண்டார்.
மீண்டும் இணைப்புக் கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்குமாறும் குழுத் தலைவர் மேலும் கூறினார்.
மின்சார கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் முறைமையொன்றை அமுல்படுத்த வேண்டும் எனவும் – நாடாளுமன்ற உறுப்பினர் வலேபொட பரிந்துரைத்துள்ளார்.