தாடி வைத்துள்ள மாணவரின் கல்வி நடவடிக்கைக்கு இடையூறு மேற்கொள்ள இடைக்காலத் தடை: கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு எதிரான இரண்டாவது உத்தரவு

🕔 December 15, 2023

தாடி வைத்திருக்கின்றமை காரணமாக – கல்வி நடவடிக்கைகளில் தான் ஈடுபடுகின்றமைக்கு இடையூறு மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக – இடைக்கால தடையுத்தரவை வழங்குமாறு, கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் – தாக்கல் செய்த வழக்குக்கு அமைவாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (15) இடைக்கால தடை உத்தரவை வழங்கியது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் ஸஹ்றி என்பவர் – தாடி வைத்துக் கொண்டு தனது இறுதியாண்டுக் கல்வி நடவடிக்கைகளை தொடரமுடியாத நிலை ஏற்பட்டமைக்கு காரணமான, பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு எதிராக நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு இன்று (15) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

குறிப்பிட்ட மாணவர் சார்பாக சட்டத்தரணி சுரேன் ஜானராஜ் மற்றும் சட்டத்தரணிகள் றுடானி ஸாஹிர், றஷாட் அஹமட், மேர்வின் தயாளன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

ஏற்கனவே கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு எதிராக, தாடி விவகாரத்தில் இன்னொரு மாணவரும் வழக்குத் தொடர்ந்து, இடைக்கால தடை உத்தரவொன்றைப் பெற்றுள்ள நிலையிலேயே, மீண்டும் தாடி வைத்திருக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை பிரதிவாதிகள் தடுக்கின்றனர் என்ற விடயம் நீதியரசரின் கவனத்துக்குக்கொண்டு வரப்பட்டது.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட இறுதியாண்டு மாணவரான ஸஹ்றியை பிரதிவாதிகள் தாடி வைத்திருந்த ஒரே காரணத்திற்காக, வைத்தியசாலையில் நடைபெறும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுத்தும் விரிவுரைகளில் பங்கு பெறுவதைத் தடுத்தும் வந்திருந்தனர்.

எத்தனை முயற்சிகள் எடுத்தும் அவர்கள் பிடிவாதம் அவர்களை விடவில்லை. எந்தவித அடிப்படையும் இல்லாமல் அப்பட்டமான மனித உரிமை மீறலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இப்பேராசிரியர்கள் மீறி உள்ளனர். முஸ்லிம்களின் கலாச்சார அடையாளமாக தாடி வைப்பதைத் தடுப்பதில் முன் நிற்கின்றனர் என்பதை சட்டத்தரணிகள் நீதிமன்றின் கவனத்துக்கு கொண் சென்றனர்.

வழக்கினை செவியுற்ற நீதிமன்றம் மனுவில் கோரிய இடைக்கால நிவாரணத்தினை உடனே வழங்கியது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான மணிகண்டு திருக்குமார், பேராசிரியர் கருணாகரன் மற்றும் கிழக்குப் பல்கலைகழக நிர்வாகம் – குறிப்பிட்ட மாணவரை வைத்தியசாலையில் நடைபெறும் பயிற்சியில் பங்கு பற்றுவதில் இருந்தும், களவிஜயங்கள் செல்வதில் இருந்தும் ஏனைய பரீட்சைகளில் தோற்றுவதில் இருந்து தடுக்கும் பல்கலைக்கழகத்தின் முயற்சிக்கு எதிராக இந்த தடைஉத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்