ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு பொதுஜன பெரமுன ஆதரவில்லை: அமைச்சர் பிரசன்ன மறைமுகமாகத் தெரிவிப்பு

🕔 December 6, 2023

– முனீரா அபூபக்கர் –

நாட்டில் அடுத்ததாக ஆட்சிக்கு வரும் ஜனாதிபதி சகலரின் ஆதரவையும் பெறக்கூடிய ஒருவராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன அடுத்த வருடம் நடைபெறும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

மின்கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், அடுத்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் – மின் கட்டணம் குறைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

கம்பஹா மாவட்டச் செயலகத்தில் இன்று (06) நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயங்களைக் கூறினார்.

அப்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் பதில்களும் வருமாறு:

கேள்வி – மின் கட்டணம் அதிகரிப்பு பற்றி என்ன சொல்கிறீகள்?

பதில் – ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த நாட்டில் என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். 13 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கும் நாடாக இருந்தது. எரிபொருட்களில் சிக்கல் ஏற்பட்டது. அத்தியாவசிய மருந்துகளில் சிக்கல் ஏற்பட்டது. இப்போது நாடு படிப்படியாக நிலைபெற்று வருகிறது. ஜனவரி, பெப்ரவரி மாதத்திற்குள் மின் கட்டணம் குறையும் என நம்புகிறோம்.

கேள்வி – வற் (VAT) சேர்க்கப்படுமா?

பதில் – வற் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

கேள்வி – பொதுஜன பெரமுன கிராம மட்டத்திற்கு செல்ல முடியாது என ஜே.வி.பி கூறுகிறது. அலுவலகங்களில் கூட்டங்கள் நடந்தாலும், கூட்டங்களை நடத்த வெளியே செல்ல முடியாது என்றும் கூறுகிறது.

பதில் – தற்போது கிராம மட்டத்தில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம். கிளை அமைப்புகளும் நிறுவப்பட்டுள்ளன. எங்களது வேலைத்திட்டம் நடக்கிறது. எங்கள் வீடுகளை எரிக்கவும், எங்கள் தலைவர்களை அடித்து துன்புறுத்தவும், எங்களை கிராமங்களுக்கு வரவிடாமல் கொல்லவும் அவர்கள் முயன்றனர்.

ஆனால் நாம் அதைவிட பலமாக செல்வோம். இப்போது முடிந்தால் என்ன நடக்கிறது என்று வந்து பார்க்கச் சொல்லுங்கள். சந்திரிகா குமாரதுங்கவை ஆட்சிக்குகொண்டுவர ஜேவிபி உதவியது. மஹிந்த ராஜபக்ஷவையும் ஆட்சிக்கு கொண்டுவர அந்தக் கட்சி உதவியது. அவர்கள் அந்த அரசாங்கங்களில் அமைச்சர் பதவிகளையும் பெற்றனர். அந்தக் குழுவினர் – நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டில் தங்கியிருந்தது. இப்போது தாங்கள் ஒருபோதும் ஆட்சிக்கு வரவில்லை என்பதை நாட்டுக்கு காட்ட முனைந்தாலும், ஜே.வி.பி ஒவ்வொரு அரசாங்கத்திலும் தலையிடும் கட்சி என்பதை இந்நாட்டின் அறிவார்ந்த மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். அப்படியென்றால் அவர்களும் தோல்விதான்.

கேள்வி – அவர்களும் இந்த பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தினார்களா?

பதில் – நிச்சயமாக. 88/89 காலப்பகுதியில் வீடுகளை எரித்து மற்றும் அரச சொத்துக்களை அழித்தமையினால் இந்த நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அதனை அவர்களால் இல்லை என்று சொல்ல முடியாது.

கேள்வி – வரும் ஆண்டு தேர்தல் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு எப்படி தயார் ஆகுகிறீர்கள்?

பதில் – நூற்றுக்கு மூன்று சதவீதத்துடன் உள்ள ஒரு கட்சி – இந்த நாட்டில் ஒரேயடியாக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால், இந்த நாட்டில் எத்தனை ஆயிரம் பேர் மாற வேண்டும்?

ஆனால் கடந்த கால இச்சம்பவத்தின் மூலம் – ஒரு குறிப்பிட்ட அளவு மொட்டுக் கட்சி பின்னடைவைச் சந்தித்ததைக் காணலாம். ஆனால் இன்று புரிந்து கொண்டு எம்முடன் இணைந்து கொண்டுள்ளனர்.

இந்த நாட்டில் பெரும்பான்மை பலம் – ஒன்றில் எங்களுக்கு உள்ளது. அல்லது ஐக்கிய மக்கள் சக்திக்கோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ உள்ளது.

மூன்று சதவிகிதம் எப்படி ஒரே நேரத்தில் ஐம்பத்தொரு சதவிகிதத்தை உருவாக்க முடியும். அவர்களில் ஒரே ஒரு குழுவினர் – நாடு முழுவதும் செல்கிறது, அது நல்லது. ஜனநாயக முறைக்கு வந்தால் மக்களைக் கொல்லாமல் இருப்பது நல்லது என்று சொல்கிறோம்.

தமது அரசாங்கம் வந்தால் அடக்குமுறைகள் ஆரம்பிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்த கூறியிருந்ததைப் பார்த்தோம். ஒடுக்கப்பட்ட மக்களின் இரத்தத்தை இதுவரை எங்கள் கட்சி பார்த்தில்லை.

கேள்வி – உங்கள் கருத்துப்படி கடந்த தேர்தலில் ஐ.தே.கவும் 3 சதவீத வெற்றியைப் பெற்றது.

பதில் – அதனால்தான் அடுத்த ஜனாதிபதியாக வருபவர் அனைவரின் ஆதரவையும் பெறக்கூடியவராக இருப்பார் என்று கூறுகின்றேன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்