புதிய பொலிஸ் மா அதிபர் விடயத்தில் ஜனாதிபதி – அமைச்சர் டிரான் உடன்பாடு: தேசபந்து தென்னகோன் நியமிக்கப்படலாம்

🕔 November 29, 2023

அடுத்த பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கலந்துரையாடியுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பின்படி பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. இந்த பதவியில் நீண்ட காலம் பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன அண்மையில் ஓய்வுபெற்றார். இந்த நிலையைில் அடுத்த பொலிஸ் மா அதிபருக்காக முன்மொழியப்பட்ட பெயர் தொடர்பில் ஜனாதிபதிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தாமதமானது.

இதனால், சி.டி. விக்ரமரத்னவின் பதவிக் காலம் நான்கு தடவை – ஜனாதிபதியினால் நீடிக்கப்பட்டது.

புதிய பொலிஸ் மா அதிபர் நியமனத்தை ஜனாதிபதி வழங்கியவுடன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான அரசியலமைப்பு சபை – அதனை அங்கீகரிக்க வேண்டும். பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்களாக உள்ளனர். சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 10 உறுப்பினர்கள் அரசியலமைப்புச் சபையில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த நிலையில் புதிய பொலிஸ் மா அதிபர் உத்தேச நியமனத்துக்கு ஜனாதிபதியும் அமைச்சர் டிரான் அலஸும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.

அந்தப் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவு செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் ஊகிக்கப்படுகிறது – என, டெய்லி மிரர் மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்