அம்பாறை மாவட்டத்திலுள்ள 623 வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்களை வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ஆலோசனை

🕔 September 5, 2023

– முனீரா அபூபக்கர் –

ம்பாறை மாவட்டத்தில் காணி உறுதிகள் தொடர்பான பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்டுள்ள 18 வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் 623 வீடுகளுக்கான வீட்டு உரிமைப் பத்திரங்களை விரைவாக வழங்குமாறும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார்.

அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலகங்களுக்கு சொந்தமான காணியில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பிரதேச செயலகத்தினால் காணி உறுதிப்பத்திரங்களுக்கு அதிக பெறுமதி பெறப்படுவதனால், மக்கள் அதனை பெற்றுக்கொள்ள முன்வருவதில்லை என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான டபிள்யூ. டி.வீரசிங்க தெரிவித்தார்.

எனவே குறித்த காணியை தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் சுவீகரித்து – அதற்கான உரிமைப் பத்திரங்களை வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுப்பதாகவும், அந்த காணிகளின் உரிமையை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு மாற்றுவதற்கு அண்மையில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அங்கீகாரம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பிரதேச செயலகங்கள் வசம் உள்ள காணிகளின் உரிமை – தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு மாற்றப்பட்டதன் பின்னர், காணி உறுதிப் பத்திரங்களை உடனடியாக வழங்குவதில் பிரச்சினையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற ‘உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்’ வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ், காணி உறுதி மற்றும் வீட்டுக்கடன் காசோலைகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் 51 பயனாளிகளுக்கு 18.25 மில்லியன் ரூபா பெறுமதியான வீடமைப்புக் கடனுதவியும், அம்பாறை மாவட்டத்தில் 15 வீடமைப்புத் திட்டங்களை உள்ளடக்கிய 110 பயனாளிகளுக்கு காணி உறுதிகளும் இதன்போது வழங்கப்பட்டன.

அம்பாறை மாவட்ட மக்களுக்கு 23 வருடங்களின் பின்னர் வீட்டு உரிமைப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்