2022இல் நடைபெற்ற எரிபொருள் ஊழல் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்படும்: அமைச்சர் கஞ்சன

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற எரிபொருள் விநியோக ஊழல் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்பட உள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பிரதி விலைப்பட்டியல் (duplicate invoices) மூலம் இந்த மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.
“இது குறித்து கேபிஎம்ஜி லிமிடெட் எனும் உள்ளூர் நிபுணத்துவ நிறுவனம் – தடயவியல் கணக்காய்வை நடத்தும்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த வருடம் இறக்குமதி செய்த போது, குறிப்பிட்ட அளவு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் காணாமல் போனதாக நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன இதன்போது கூறினார்.
“500 பவுசர்களில் இருந்த எரிபொருள் சேமிப்பிடம் இல்லாத இடத்தில் இறக்கப்பட்டது. ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மூன்று அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், தடயவியல் கணக்காய்வு மூலம் சம்பவம் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளிப்படுத்த முடியும் என்றார்.