ஒரு லட்சம் குரங்குகளை இலங்கையிடம் கேட்கவேயில்லை: சீனத் தூதரகம் தெரிவிப்பு
இலங்கையின் எந்த தரப்பினரிடமும் ஒரு லட்சம் குரங்குகளை தாம் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பிலான தௌிவுபடுத்தலை – இலங்கைக்கான சீன தூதரகம் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சீனாவில் உள்ள வன விலங்குகள், தாவரங்களின் இறக்குமதி – ஏற்றுமதியை மேற்பார்வை செய்யும் பிரதான அரசாங்கத் திணைக்களமான சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திடம் இவ்விடயம் தொடர்பில் தாம் வினவிய போதும், அவர்கள் அதனை அறிந்திருக்கவில்லை என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அழிந்து வரும் உயிரினங்கள், தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் ஒரு பங்காளியாக தமது நாடு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை பல திருத்தங்களுடன் நிறைவேற்றியுள்ளதாக சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வனவிலங்குகளின் பாதுகாபுக்கு சீன அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னுரிமை வழங்குவதாகவும், அதற்கான சர்வதேச கடமைகளை தீவிரமாக நிறைவேற்றுவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
தொடர்பான கட்டுரை: வாழ்விடமே இல்லாமல் போன ‘தொங்கு மான்’: ஒரு தேசத்தால் கைவிடப்படும் விலங்கினத்தின் கதை