போதைக்கு அடிமையான பாடசாலை மாணவர்கள் 81 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பி வைப்பு: கல்வியமைச்சர் தகவல்

போதைப்பொருளுக்கு அடிமையான பாடசாலை மாணவர்கள் 81 பேர், இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (09) தெரிவித்தார்.
2022 ஜனவரி முதல் செப்டம்பர் வரை புனர்வாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களில்14 வயதுக்குட்பட்ட மூன்று பேரும், 15 முதல் 19 வயதுக்குட்பட்ட 78 பேரும் இருப்பதாக அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
ஐஸ் (methamphetamine crystals) போன்ற ஆபத்தான போதைப் பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நடைமுறையில் உள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும், விஷம், அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் (திருத்தம்) சட்டமூவத்தை ஜனவரி முதல் வாரத்துக்குள் நாடாளுமன்றதுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
இந்த விடயத்தை எதிர்கொள்வதற்காக நாடாமன்ற தெரிவுக்குழுவை நியமித்து – மூன்று மாதங்களுக்குள் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான முன்மொழிவை வழங்குமாறு இதன்போது ரத்தின தேரரை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
அதன்படி, பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான தீர்வுகளை காண்பதற்கு நாடாமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு சபாநாயகரிடம் ரதன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.