லொஹான் ரத்வத்தவுக்கு இன்னுமொரு ராஜாங்க அமைச்சர் பதவி
களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் (10) ஜனாதிபதி முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக குறித்த பதவியை வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர அண்மையில் விலகியிருந்தார்.
இதனையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
ரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில்கள் ராஜாங்க அமைச்சராகவும் லொஹான் ரத்வத்த பதவி வகித்து வருகின்ற நிலையில், அதற்கு மேலதிகமாக அவருக்கு இந்த புதிய அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக கடந்த வருடம் குற்றச்சாட்டுக்குள்ளான ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அதன் காரணமாக அவர் அப்போது வகித்த சிறைச்சாலைகள் நிர்வாகம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.
தொடர்பான செய்தி: ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர ராஜிநாமா