சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருவது தொடர்பில் ஆராய்வதாக நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு: ஆட்சியாளர்களின் பிடிவாதம் தளர்கிறதா?

🕔 January 27, 2022

ர்வதேச நாணய நிதியத்துடன் (ஐ.எம்.எஃப்) ஒப்பந்தம் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும், கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

‘லண்டன் பைனான்சியல் டைம்ஸ்’க்கு அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்; “கடனை திருப்பிச் செலுத்தாதிருப்பதற்கும், பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கும் இலங்கை அனைத்து வழிகளையும் ஆராய்கிறது” என்றார்.

“எங்களிடம் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் உள்ளன. அதை நாங்கள் திருப்பிச் செலுத்த வேண்டும். எனவே நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். எங்களிடம் கடன் வழங்குபவர்கள் உள்ளனர். அவர்களின் கடனை நாங்கள் செலுத்த வேண்டும். எனவே நாங்கள் இவற்றினைச் சீர் செய்ய முடியுமா அல்லது சில வகையான விடயங்களைச் செய்ய முடியுமா எனப் பார்க்கிறோம்” என்றார்.

“சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருவது தொடர்பில் அரசாங்கம் சிந்திக்கும்” என்று கூறிய அவர், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தபோதிலும் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரப் போவதில்லை என்று அரசாங்கம் அண்மையில் கூறியிருந்தது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி உதவி பெறுவதை அமைச்சரவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பவில்லை.

நிதியுதவி வழங்கும் பொருட்டு சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிபந்தனைகளுக்கு எதிராகவே பெரும்பாலான அமைச்சர்கள் உள்ளனர்.

இருந்தபோதும் இலஙகை உதவி கோரினால் அதுபற்றி பேசுவதற்கு தாம் தயாராக உள்ளதாக, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணித் தலைவர் மசாஹிரோ நோசாக்கி, கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்