கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொட, வடமேல் மாகாண ஆளுநராக நியமனம்
வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ஒஃப் த ஃப்ளீட் வசந்த கரண்ணாகொட நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (9) புதிய ஆளுநர் தமது நியமன கடிதத்தை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டதாக மேலும் தெரிக்கப்பட்டுள்ளது.
வட மேல் மாகாண ஆளுநராக பதவி வகித்துவந்த ராஜா கொல்லுரே கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.
இதனையடுத்து, ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்காக ஓய்வுபெற்ற கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு 11 பேர் கடத்தி காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்ட வசந்த கரண்ணாகொட உள்ளிட்ட சிலருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதில்லை என, கடந்த ஒக்டோபர் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு சட்ட மாத அதிபர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: 11 இளைஞர்கள் கடத்திக் காணாலாக்கப்பட்ட வழக்கு; கடற்படை முன்னாள் தளபதிக்கு எதிராக முன்கொண்டு செல்லப்பட மாட்டாது: சட்ட மா அதிபர் அறிவிப்பு