பிரபாகரன் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர் வத்தளையில் கைது

🕔 February 23, 2021

விடுதலைப் புலிகள் அமைப்பின் மறைந்த தலைவர் வேலுபில்லை பிரபாகரனின் படங்களுடன் வீடியோவை சமூக ஊடகங்களில் ‘டிக் டோக்’ வழியாக வெளியிட்ட குற்றச்சாட்டில் 25 வயது நபர் ஒருவரை பயங்கரவாத புலனாய்பு பிரிவு கைது செய்துள்ளது.

சந்தேகநபர் வத்தள பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவின் வீடியோக்களையும் படங்களையும் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தியதாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபர் முல்லைத்தீவை சேர்ந்தவர் என்றும், ஆனால் அவர் தற்போது ஹற்றனில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரின் தொலைபேசியை சோதனையிட்டபோது, ​​அதில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பல செய்தி உள்ளடக்கங்களை அவர் தயாரித்திருந்தமை தெரியவந்துள்ளதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

சந்தேக நபர் தற்போது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அதேவேளை அவர் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

சமூக ஊடகங்களில் இதுபோன்ற உள்ளடக்கங்கள் பகிரப்படுவதைக் கண்காணிக்க பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளை உள்ளடக்கிய ‘சைபர் ரோந்து’ என்ற சிறப்புப் பிரிவு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் உள்ளடக்கத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவது, பகிர்வது அல்லது அனுப்புவதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்