உலகில் அதிகளவு யானைகள் பலியாகும் நாடாக இலங்கை: கோபா குழு முன்னிலையில் மீண்டும் கணக்கறிக்கை பரிசீலனை
இலங்கையில் யானை – மனித மோதல் தொடர்பிலான விசேட கணக்கறிக்கை, பொது கணக்குகள் குறித்த நாடாளுமன்ற தெரிவு குழு (கோபா) முன்னிலையில் இன்று மீண்டும் பரிசீலிக்கப்படவுள்ளது.
உலகில் அதிகளவு யானைகளின் மரணங்கள் நிகழும் நாடாக இலங்கை மாறியுள்ளமை, முன்னதாக இடம்பெற்ற கோபா குழுக் கூட்டத்தில் தெரியவந்தது.
நாட்டின் மனித – யானை மோதல் தொடர்பில் பல வருடங்களாக ஆய்வில் ஈடுப்பட்டிருந்த கலாநிதி ப்ரிதிவ்ராஜ் பெர்னாண்டோவால் குறித்த விடயங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இலங்கையில் யானை மனித மோதலால் வருடாந்தம் 272 யானைகள் பலியாகின்றன.
எனினும், கடந்த வருடம் 407 யானைகள் உயிரிழந்தமை கோபா குழுவின் ஆய்வில் தெரியவந்தது.
அத்துடன், யானை – மனித மோதலால் வருடாந்தம் சுமார் 85 மனித உயிர்கள் பலியாகின்றன. இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டில் 122 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறான நிலையில், நாட்டில் யானை – மனித மோதலை குறைப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் கோபா குழுவின் இன்றைய கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.