முச்சக்கர வண்டி விபத்து: ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்
– க. கிஷாந்தன் –
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுங்காயங்களுக்கு உள்ளானார்.
நாவலப்பிட்டி – ஹரங்கல பகுதியிலிருந்து கொத்மலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டிநேற்று திங்கட்கிழிமை மாலை ஹரங்கல – கொத்மலை நீர்தேக்க பிரதான வீதியில் ரத்மிலபிட்டிய பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் ஹரங்கல பகுதியை சேர்ந்த ஆர்.எம். புத்திக்க (வயது – 30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுங்காயமடைந்த மற்றவர் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.