தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவர் பரிந்துரைப்பு

🕔 April 29, 2024

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு, தற்போதைய உபவேந்தர் உள்ளிட்ட மூவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

உபவேந்தர் பதவிக்கு மூன்று பேரை பரிந்துரைப்பதற்கான விஷேட பேரவை ஒன்றுகூடல், இன்று (29) பேராசிரியர் கொலின் என் பீரிஸ் தலைமையில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கொழும்பில் உள்ள Academic Program Centre இல் இடம்பெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 03/2023 ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் கோரப்பட்டுள்ளதன் அடிப்படையில், பேரவை உறுப்பினர்கள் இதன்போது விண்ணப்பதாரிகளுக்கு 07அளவுகோல்களின் (Criteria) கீழ் புள்ளிகள் இட்டு, அவர்கள் பெற்றுக் கொண்ட அதிகூடிய புள்ளிகள் அடிப்படையில் மூவரை தெரிவு செய்தனர்.

இதன் படி, முதலாவதாக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், இரண்டாவதாக பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, மூன்றாவதாக பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப் ஆகியோர் அதிக புள்ளிகள் அடிப்படையில் பேரவையால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் முதலாவது பதவிக்காலம் எதிர்வரும் 2024.08.09 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்துக்கமைய – பல்கலைக்கழக பேரவையின் சார்பில் பதில் பதிவாளர் எம்.ஐ.எம். நௌபர், விண்ணப்பங்களுக்கான அழைப்பை கடந்த 2024.02.08 ஆம் திகதி விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பேராசிரியர் எம்.வி.எம். இஸ்மாயில், பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் மற்றும் கலாநிதி ஏ.சி.எம். ஹனஸ் உள்ளிட்ட ஏழுபேர் விண்ணப்பித்திருந்தனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு இம்முறை தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாத்திரமே விண்ணப்பித்திருந்தனர். பல்கலைக்கழகத்துக்கு வெளியேயிருந்து எவரும் விண்ணப்பிக்கவில்லை.

கடந்த 2021.08. 09 ஆம் திகதியன்று பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் 05 ஆவது உபவேந்தராக நியமிக்கப்பட்டிருந்தார். இன்று தெரிவு செய்யப்பட்டுள்ள குறித்த மூவரில் ஒருவரை ஜனாதிபதி 06ஆவது உபவேந்தராக நியமிப்பார்.

கடந்த முறை உபவேந்தர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட மூவரில் – தற்போது புள்ளிகள் அடிப்படையில் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்ட றமீஸ் அபூபக்கர் மூன்றாவது இடத்தினையும், தற்போது இரண்டாமிடத்தைப் பெற்றுள்ள பேராசிரியர் ஏ.எம். றஸ்மி முதலாவது இடத்தினையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இம்முறை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ள பேராசிரியர் ஹன்ஸியா றவூப், கடந்த முறையும் உபவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆயினும், அப்போது பரிந்துரைக்கப்பட்ட மூவரில் ஒருவராக அவர் தெரிவாகியிருக்கவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்