முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, உச்ச நீதிமன்றில் ஹரீஸ் மனுத் தாக்கல்

🕔 May 20, 2020

– அபு ஹின்சா –

கொவிட்-19 வைரஸ் காரணமாக உயிரிழந்த முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பது அடிப்படை மனித உரிமை மீறல் என தெரிவித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் உச்ச நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் மனுவொன்றை இன்று புதன்கிழமை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் சார்பில் உச்ச நீதிமன்ற சிரேஷ்ட சட்டத்தரணி எம்.சி. முகம்மட் நவாஸ் நெறிப்படுத்தலில் உச்ச நீதிமன்ற சட்டத்தரணி முகம்மது ஹனிபா முகம்மட் ஹைர் – குறித்த மனுவை தாக்கல் செய்தார்.

அம்மனுவில் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட 2170/08 எனும் வர்த்தமானி சட்டத்திற்கு முரணானது. அதை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவில் உயிரிழக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை உரியமுறைப்படி நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

மேலும் தான் ஒரு முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவன் என்ற வகையிலும், மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையிலும் தனது மத சுதந்திர உரிமை மீறப்பட்டுள்ளது என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மன்று உத்தரவிடுமாறும் மனுவில் கோரிக்கை விக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்