மக்கள் வங்கிக் கிளையின் அட்டாளைச்சேனை முகாமையாளர், அரசாங்க உத்தரவை தொடர்ந்தும் புறக்கணிப்பதாக பாதிக்கப்பட்டோர் புகார்
– அஹமட் –
வங்கிகளில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பெற்றுக் கொண்ட கடன்களுக்கான தவைணைக் கட்டனங்களை, அவர்களின் சம்பளத்தில் அறவிடுவது – மே மாதம் 30ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை முகாமையாளர் – இதனை மீறிச் செயற்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தில், கடன் தவணைப் பணத்தை வங்கிகள் அறவிடுவது. மே மாதம் 30ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், பத்து லட்சத்திற்கும் குறைந்த தனிப்பட்ட கடனைப் பெற்றுக்கொண்ட நபர்களிடமிருந்து கடனை அறவிடுவது 03 மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது எனவும், அரசாங்கம் அறிவித்திருந்தது.
மார்ச் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில் மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை கிளையின் ஊடாக கடன் பெற்ற அரச ஊழியர்களின் சம்பளத்தில், கடனுக்கான தவணைக் கட்டணத்தை, அந்த வங்கிக் கிளை இம்மாதம் அறவிட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை கிளையில் மேலதிகப் பற்றாக பணம் பெற்றவர்கள் மற்றும் குறித்த வங்கிக் கிளைக்கு காலோலைகளை எழுதியவர்கள், அவற்றுக்கான பணத்தை உரிய திகதியில் செலுத்தவில்லை எனக்கூறி, அவற்றுக்குரிய வாடிக்கையாளர்களிடமிருந்து அந்த கிளையின் முகாமையாளர் தண்டப்பணம் அறவிட்டதாகவும் புகார்கள் உள்ளன.
வங்கி காசோலைக்கான செல்லுபடியாகும் காலம், மே மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே, காலோலைக்கு பணம் செலுத்தாத வாடிக்கையாளர்களிடமிருந்து அட்டாளைச்சேனை கிளை முகாமையாளர், தண்டப்பணம் அறிவிட்டிருந்தார்.
இது குறித்து சில நாட்களுக்கு முன்னரும் செய்தியொன்றை நாம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும், அரசாங்கத்தின் உத்தரவை மதிக்காமல், மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை கிளையின் முகாமையாளர், தொடர்ச்சியாக இவ்வாறு தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வருவதாக, பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.
தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில், மக்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள சலுகையை, ஒரு வங்கிக் கிளையின் முகாமையாளர் எவ்வாறு மீறிச் செயற்பட முடியும் எனவும், பாதிக்கப்டோர் கேள்வி எழுப்புகின்றனர்.
மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை கிளை முகாமையாளராக, எம்.ஐ. யஹ்யா என்பவர் கடமையாற்றுகின்றார்.
தொடர்பான செய்தி: மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை கிளை முகாமையாளர், அரசாங்க உத்தரவை உதாசீனம் செய்வதாக, வாடிக்கையாளர்கள் விசனம்