கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றவர்களில் இருவர், நெருசலில் சிக்கி பலி
கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த தொண்டர்களிடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, இருவர் இறந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில்,தொண்டர்கள் கலைந்துசெல்லும்படி மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையிலுள்ள ராஜாஜி மண்டபத்தில் கருணாநிதியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
சற்று நேரத்திற்கு முன்பாக தொண்டர்கள் மத்தியில் பேசிய மு.க. ஸ்டாலின்; கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி மண்டபம் அமைந்துள்ள வளாக சுவற்றை ஏறிக்குதித்து வருவதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டுமென்றும், தொண்டர்கள் கலைந்து சென்றால்தான் திட்டமிட்டபடி இறுதி ஊர்வலத்தை 04 மணிக்கு நடத்த முடியுமென்றும் கூறியிருந்தார்.
உங்கள் சகோதரனாகக் கேட்கிறேன், தயவுசெய்து கலைந்துசெல்லுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைக்கு இருவர் இறந்த நிலையில் கொண்டுவரப்படதாகவும், 41 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் உள்ளுறை மருத்துவ அதிகாரி இளங்கோ தெரிவித்தார்.
தொடர்பான செய்தி: காலமானார் கருணாநிதி