இலங்கையின் புதிய வரைபடம் வெளியாகியது; மேலும் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவிப்பு
🕔 May 31, 2018
இலங்கையின் புதிய வரைபடத்தின் 2 ஆவது பதிப்புக்கான வெளியீட்டு நிகழ்வு இன்று வியாழக்கிழமை இலங்கை நில அளவை திணைக்களத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக , நில அளவை திணைக்கள பணிப்பாளர் பி.எம்.பி. உதயகாந்த மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
1:500 எனும் விகிதத்தில் இலங்கைக்கான புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. துறைமுகநகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், மொஹரகந்த நீர்த்தேக்கம் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான கட்டமைப்பு ஆகியன வரைபடத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
துறைமுக நகரம் – காலிமுகத்திடலிலிருந்து 269 ஹெக்டயர் நிலப்பரப்பினை மேலதிகமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நில அளவைத் திணைக்கள பணிப்பாளர் பி.எம்.பி. உதயகாந்த தெரிவிக்கையில்;
இலங்கையின் இடப்பரப்பானது தொடர்ச்சியாக மாற்றங்களுக்குட்பட்டுவருகின்றது. இலங்கையில் பாரிய கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த வண்முள்ளமையால், இன்னும் சில வருடங்களில் இலங்கை வரைபடத்தில் மேலும் மாற்றங்கள் ஏற்படும் என்றார்.